இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Su.tha Arivalagan
Jun 10, 2026,01:54 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த மாபெரும் ஆளுமையும், 'இயக்குனர் இமயம்' என்று ஒட்டுமொத்த திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவருமான இயக்குனர் பாரதிராஜா (வயது 85) இன்று காலை வயது முதிர்வின் காரணமாக காலமானார்.சென்னை நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


1941-ஆம் ஆண்டு பிறந்த பாரதிராஜா, தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்து கிராமங்களின் எதார்த்தமான மண் வாசனைக்கு கூட்டிச் சென்றவர். '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா என எண்ணற்ற காவியத் திரைப்படங்களைப் படைத்து தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது திரையுலகப் பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளும், பல தேசிய மற்றும் மாநில விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.





இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல், இன்று இரவு (10.06.2026) சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது. தேனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது. நாளை மாலை (11.06.2026) சுமார் 3.00 மணியளவில் அவரது இறுதிச்சடங்குகள் மற்றும் நல்லடக்கம் நடைபெற உள்ளது.



பாரதிராஜாவின் மறைவையொட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். "தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம் முடிவுக்கு வந்துள்ளது" என திரையுலகினர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதால், அங்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மறைந்த இயக்குநர் பாரதிராஜா திரைத்துறையில் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் தேனியில் நாளை அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.