தேமுதிக.,வுக்கு எத்தனை சீட்? மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை சீட்களை கேட்டு பெறுவது என்பது தொடர்பாக சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை :
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல் என்பதால், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கசிந்துள்ள தகவல்களின்படி, திமுக கூட்டணியில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், திமுகவிடம் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் தேமுதிக உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
கட்சியின் செல்வாக்குள்ள தொகுதிகள் எவை என்பது குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறித்தும் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. "கட்சியின் வளர்ச்சியை நிரூபிக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெறுவது அவசியம்" என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் வியூகம் :
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்குப் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தினார். 'ஜனநாயகத் திருவிழா 2026' என்ற இலக்கை நோக்கித் தொண்டர்கள் இப்போதே களப்பணியைத் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. திமுக தரப்பிலிருந்து இதற்கு என்ன மாதிரியான பதில் வரும் என்பதையும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்பதையும் அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
ஏற்கனவே சிபிஎம், சிபிஐ, விசிக என திமுக கூட்டணியில் பல காலமாக இருக்கும் கட்சிகள் தங்களுக்கு குறைவான சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து வரும் நிலையில் புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக இரட்டை இலக்கத்தில் சீட் கேட்க முடிவு செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக.,விற்கு திமுக தலைமை எத்தனை சீட்களை ஒதுக்க போகிறது? அவற்றை தேமுதிக ஏற்குமா என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது