மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்...லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Su.tha Arivalagan
Jun 25, 2026,10:25 AM IST

சென்னை : தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்கள் மற்றும் சில திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று ரெய்டு நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  




இந்நிலையில் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.


அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்கு முறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!" என குறிப்பிட்டுள்ளார்.