யோவ் என்று விளித்து.. தவெக தலைவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்த திமுக ராஜீவ் காந்தி!
சென்னை: நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் ப. சுப்பராயனுக்கு நினைவிடம் கட்டுவதாக சொன்னீங்களே என்னாச்சு என்று கேட்ட தவெக தலைவர் விஜய்க்கு, திமுகவின் ராஜீவ் காந்தி, யோவ் என்று விளித்துப் பதில் கொடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
நாமக்கல்லில் இன்று நடந்த கூட்டத்தில் விஜய் பேசும்போது நாமக்கல்லைச் சேர்ந்த, முன்னாள் முதல்வரான ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக திமுக வாக்குறுத்தி கொடுத்தது. அது என்னாச்சு என்று கேட்டிருந்தார். அதற்கு தற்போது திமுக தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் ஆர். ராஜீவ் காந்தி அளித்துள்ள எக்ஸ் தளப் பதிவில், யோவ் விஜய், பொய் பேசுவதை நிறுத்தியா…பொய்.. பொய்யா பேச வேண்டியது!!!
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார்…
கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயன் அவர்களுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது என்று அவர் பதிலளித்துள்ளார்.
விஜய்யை பொது வெளியில் வைத்து, ஒரு பொறுப்பான திமுக நிர்வாகி, யோவ் என்று பதிலளித்து டிவீட் போட்டுள்ளது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.