விஜய்க்கு "விஜயகாந்த்" மூலம் செக் வைத்த திமுக.. கருணாநிதி விட்டதைப் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: விஜயகாந்த்தின் வாரிசாக, தனது ஆதரவாளர்களால் பார்க்கப்படும் விஜய்க்கு செக் வைப்பதற்காகவே தேமுதிகவை தனது கூட்டணிக்கு திமுக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 2005ம் ஆண்டு மதுரையில் தேமுதிகவைத் தொடங்கினார். தொடர்ந்து மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி தனித்து 2 தேர்தல்களில் போட்டியிட்டார். தேர்தலுக்குத் தேர்தல் அவருக்கு ஆதரவும் கூடி வந்தது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தவர் விஜயகாந்த்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜயகாந்த். அதன் பின்னர் அவரது அரசியல் சரிந்து போய் விட்டது. படிப்படியாக தளர்ந்து போன தேமுதிக கடைசியில் எந்த ஒரு வெற்றியையும் இனிமேல் பார்க்கவே முடியாதா என்ற அளவுக்குக் கரைந்து போய் விட்டது.
இந்த நிலையில்தான் தற்போது மிகப் பெரிய கூட்டணிக்குள் தேமுதிக வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு முதல் முறையாக தேமுதிக வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு வந்த பெரும்பாலான கட்சிகள் திரும்பிப் போனதில்லை, திரும்பிப் போகவும் விரும்பாது. காரணம், இந்தக் கூட்டணியில் அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் கெளரவமும் அப்படி இருக்கும் என்பதால்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த போது அவரை விஜயகாந்த்தின் வாரிசாகவே, வடிவாகவே அவரது ஆதரவாளர்கள் பார்த்து வந்தனர். விஜயகாந்த்தை விட்டுட்டோம், விஜய்யை விட மாட்டோம் என்பதை ஒரு வாசகமாகவே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். விஜயகாந்த் ஆதரவாளர்களை தங்களது பக்கம் கொண்டு வரும் உத்தியாக அது பார்க்கப்பட்டது.
தேமுதிகவும், விஜய்யுடன் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. விஜயகாந்த்தை எங்க வீட்டுப் பிள்ளை என்றே பிரேமலதாவும் கூறி வந்தார். விஜயகாந்த் ஆதரவாளர்கள், ரசிகர்கள், கிட்டத்தட்ட விஜய் பக்கம் திரும்பும் நிலையும் உருவாகி வந்தது. ஆனாலும் எந்த ஒரு இடத்திலும் விஜய், விஜயகாந்த் பெயரைப் பயன்படுத்தி தனக்கு சாதகமாக மாற்ற முயன்றதில்லை. மதுரையில் நடந்த கூட்டத்தில் மட்டும் அவர் மரியாதைக்காக விஜயகாந்த் பெயரைச் சொல்லியிருப்பார்.
இந்த நிலையில்தான் விஜய் பக்கம் விஜயகாந்த் ஆதரவு வட்டம் போய் விடக் கூடாது என்ற நோக்கில் தேமுதிகவை திமுக உள்ளே இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையான அரசியல் சாணக்கியத்தனமாகவும் பார்க்கப்படுகிறது. தேமுதிகவை, தங்கள் பக்கம் இழுத்து விட்டதால் இனிமேல் விஜயகாந்த் பெயரையோ அவர் குறித்த பேச்சையோ தவெகவினர் எடுக்க மாட்டார்கள் என்பது திமுகவின் கருத்தாகும்.