பெண் தானே.. மனைவிதானே.. வீட்டில்தானே இருக்காங்க.. அப்படின்னு லைட்டா எடுத்துக்காதீங்க!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
இப்போதெல்லாம் “உனக்கென்னம்மா. ஜாலியா வீட்டிலேயே இருக்க… என்ன வேலை?”ன்னு இல்லத்தரசிகளைப் பார்த்து பலர் சொல்வது சாதாரண விஷயமா ஆகிடுச்சு. ஆனா அதே விஷயத்துக்கே ஒரு கோர்ட் கம்பீரமான பதில் கொடுத்திருக்கிறது.
வீட்டை பார்த்துக்கொள்வது, குழந்தைகளை கவனிப்பது, சமையல், சுத்தம், குடும்ப மேலாண்மை — இவை எல்லாம் சம்பளம் இல்லாத வேலைகள் தான், ஆனா மதிப்பு இல்லாத வேலைகள் கிடையாது என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது.
ஒரு வழக்கில், “மனைவி சம்பாதிக்கல… வீட்டில்தான் இருக்காங்க” என்று கணவர் தரப்பு கூறியதற்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். “இல்லத்தரசிகளை வேலை செய்யலன்னு சொல்ல முடியாது. அவர்கள் செய்யும் வேலைக்கு மதிப்பு கணக்கிட்டா பெரிய தொகை வரும்” என்று கூறி, மாதம் ரூ.50,000 வழங்க வேண்டும் என்றும் அந்தக் கணவருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
நம்ம வாழ்க்கையிலேயே பார்த்தா தெரியும் — காலையிலிருந்து இரவு வரை வீட்டு பெண்கள் ஓய்வே இல்லாம ஓடிக்கிட்டே இருப்பாங்க. குழந்தை பள்ளி, சாப்பாடு, வீட்டு வேலை, உறவினர் விஷயங்கள், குடும்ப செலவு கணக்கு — எல்லாமே அவர்கள்தான் மேனேஜ் பண்ணுறாங்க. வெளியில் வேலைக்கு போறவங்களுக்கு கூட இவ்வளவு டென்ஷன் இருக்காது என்று பலர் சொல்வது உண்மைதான்.
இந்த தீர்ப்பு சமூகத்துக்கு ஒரு முக்கியமான மெசேஜ் கொடுக்கிறது — “ஹவுஸ் வைஃப்”ன்னு சொல்லுறதுக்கு பின்னாடி நிறைய உழைப்பு இருக்கு. சம்பளம் வரலன்னால வேலை இல்லைன்னு அர்த்தமில்லை. குடும்பம் நிம்மதியா ஓடுறதுக்கே அவர்கள்தான் காரணம்.
பல பெண்கள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்காங்க. “குறைந்தபட்சம் எங்களோட உழைப்பை கோர்ட் புரிஞ்சுக்கிட்டது”ன்னு சந்தோஷம் தெரிவிக்கிறாங்க. சமூக வலைதளங்களிலும் இந்த விஷயம் பெரிய விவாதமாகி, இல்லத்தரசிகளின் பங்களிப்பு பற்றி பலரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க.
கடைசியாக ஒரு மெசேஜ் மட்டும் — வீட்டில் இருக்குற பெண்களை “சும்மா தானே இருக்காங்க”ன்னு சொல்லுற பழக்கம் கொஞ்சம் குறைந்தா… அதுவே பெரிய மாற்றம்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)