Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

Su.tha Arivalagan
Jun 08, 2026,04:00 PM IST

- டாக்டர் எஸ் லதா சங்கரன்


எல்லா நாமங்களிலும் ராம நாமத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு, சக்தி என்று பலர் கேட்பார்கள்.


"ராம" என்ற திருநாமத்தின் முதல் எழுத்தான "ரா" என்பது நாராயணா என்ற திருநாமத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதேபோல் "ம" என்பது நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த இரு மகா மந்திரங்களின் உயிர்சக்திகளும் ஒன்றிணைந்த வடிவமே "ராம" என்ற திவ்ய நாமம்.


அதனால் தான் ராம நாமத்தை உச்சரிப்பதோ, எழுதுவதோ அளவற்ற புண்ணியத்தையும் ஆன்மிக பலனையும் அளிப்பதாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.


விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது ஆயிரம் திருநாமங்களின் தொகுப்பு. உண்மையில் அதன் மகிமை அளவிட முடியாதது. பகவான் சிவபெருமானுக்கே விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் பிரியமானது என்று புராணங்கள் கூறுகின்றன.


ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள்:




"இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை பக்தர்கள் பாராயணம் செய்வது நன்மை தரும் என்பது உண்மை. ஆனால் அனைவராலும் இவ்வளவு நீண்ட நாமாவளியை தினமும் சொல்ல முடியுமா? இதற்கு எளிய வழி ஏதாவது இல்லையா?"


அப்போது சிவபெருமான் அருளிய பதில்தான் இந்த புகழ்பெற்ற ஸ்லோகம்:


ஸ்ரீராம ராம ராமேதி

ரமே ராமே மனோரமே ।

ஸஹஸ்ரநாம தத்துல்யம்

ராம நாம வரானனே ॥


அதாவது, "ராம" என்ற நாமத்தை மூன்று முறை உச்சரிப்பதன் பலன், விஷ்ணு சகஸ்ரநாமத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலனுக்கு இணையானது என்று சிவபெருமான் கூறுகிறார்.


ராம நாமத்தின் மகிமை இதோடு முடிவதில்லை.


எங்கு ராம நாமம் ஒலிக்கிறதோ, எங்கு அது எழுதப்படுகிறதோ, அங்கு ஆஞ்சநேயர் இருப்பார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ராம நாமத்தை ஒருவர் எழுதத் தொடங்கினாலோ, உச்சரிக்கத் தொடங்கினாலோ, ஆஞ்சநேயர் சூட்சுமமாக அங்கே வந்து நிற்பார். அவருக்கு மிகவும் பிரியமான ராமபிரான், சீதாதேவி மற்றும் தெய்வீக அருள் சக்திகளும் அந்த இடத்தை நிறைத்து விடுகின்றன.


அதனால் தான் ராம நாமத்திற்கு இத்தனை ஆன்மிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.


நானும் சிறு வயதிலிருந்தே என் பாட்டி, அம்மா, பெரியம்மா ஆகியோர் ராம நாமம் எழுதி வந்ததைப் பார்த்து வளர்ந்தேன். இன்று வரை சுமார் 91 லட்சத்து 50 ஆயிரம் முறை ராம நாமம் எழுதியிருக்கிறேன். ஒரு கோடி முறை எழுத வேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலோடு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.


ராம நாமம் எழுதுவதற்கு பெரிய ஏற்பாடுகள் தேவையில்லை. தினமும் ஒரு பக்கம் எழுதினாலே போதும். ஒரு பக்கம் எழுதுவதற்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்களே ஆகும்.


ஆனால் ஒரு விஷயம் முக்கியம்.


நமக்காக மட்டும் எழுதாமல், மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து எழுதுங்கள். திருமணம் தாமதமாக இருப்பவர்கள், குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், பொருளாதார சிரமத்தில் இருப்பவர்கள் என யாருக்காக வேண்டுமானாலும் அவர்களின் பெயரை நினைத்து ராம நாமம் எழுதலாம்.


என் அனுபவத்தில், இப்படிச் செய்தபோது பல அற்புதமான மாற்றங்களை நான் கண்டிருக்கிறேன். நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் இருந்தவர்களுக்குக் கூட எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் நான் என் சாதனையாக எண்ணவில்லை; ராம நாமத்தின் அருளாகவே கருதுகிறேன்.


மற்றவர்களின் நலனுக்காக நாம் மனமார பிரார்த்தனை செய்யும்போது, நமக்குத் தேவையானதை இறைவன் அறிந்து அருளுவார்.


எனவே, இதுவரை ராம நாமம் எழுதத் தொடங்காதவர்கள் கூட இன்று முதல் தொடங்கலாம். தினமும் ஒரு பக்கமாவது எழுதுங்கள். விருப்பமிருந்தால் அதற்கும் மேலாக எழுதலாம்.


நமது குடும்ப நலனுக்காகவும், சமுதாயத்தின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் ராம நாமம் எழுதுவோம்.


"ராம" என்ற திருநாமம் நம் மனதில் அமைதியையும், வாழ்வில் நம்பிக்கையையும், ஆன்மாவில் இறையருளையும் நிரப்பட்டும்.


அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜெய் ஸ்ரீராம்!