குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

Meenakshi
Sep 16, 2025,05:13 PM IST

டெல்லி:  குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  10 நாள் கெடு விதித்திருந்தார். இதனால், அதிருப்தியடைந்த எடப்பாடி செங்கோட்டையனை அக்கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். இதனை அடுத்து மன அமைதிக்காக டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்த்து பேசி விட்டு வந்தார்.




இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி ஆகியோரும் சென்றனர். இன்று இரவு 8 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அப்போது முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி அமித்ஷாவிடம் ஈபிஎஸ் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


இதற்கிடையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்துள்ளார்.