முதியோர் இல்லம்!
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
பாசம் விதைத்த பெற்றோர் வாழ்வு
பிள்ளை நெஞ்சில் கனவாகிப் போனது!
கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த பிள்ளை தான் இன்று
முதியோர் இல்லத்தில் விட்டு வந்தது!
முகம் மறைத்து வீட்டுக்கு வந்த மருமகள் தான்
எங்காவது ஒளிந்து போங்க எனத் துரத்திவிட்டது!
மடியிலே படுத்து கதை கேட்டு மகிழ்ந்த குழந்தைகளோ ஏதும் புரியாது பார்த்தது!
காலமெல்லாம் உழைத்து சலித்த கரங்கள் நடுங்க கதவு தட்டினோம்....
மனைக்கதவோடு மனக்கதவும் திறக்கவில்லை!
எங்களுக்காகத் திறந்தது முதியோர் இல்லக்கதவு மட்டுமே!
பழுத்த பழமாய் பல குழந்தைகள் இங்கே!
என்ன பாவம் செய்தோம் நாங்கள்!
என்ன குறைவைத்தோம் எங்கள் பிள்ளைக்கு?
இந்த நிலை மாறுமா?
வாழ்வு மீண்டும் மலருமா! இந்த மாதமாவது மகன் வருவானா?
பேரப்பிள்ளைகளைக் கண்ணில் காட்டிச்செல்வானா?
இல்லை கையோடு எங்களை அழைத்துப் போவானா?
விடை தெரியாத பல கேள்விக்கு
அந்தத் தாய் தந்தை மனதில் தான் எத்தனை தடுமாற்றங்கள்?
வயதான குழந்தைகளாய் நம் பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது
அம்மா சாப்பிட்டியா? அப்பா தைரியமா இருங்க
இப்படி அன்பாக நாலு வார்த்தை, நேரங்கள் இவை தானே அந்த ஒடுங்கிப்போன குழந்தைகள் எதிர்பார்ப்பது!!!
கொடுத்தால் குறைந்து போய் விடமாட்டோம்!!
நீ உண்ணும் உணவில் ஒரு வாய் அவர்களுக்கு!
உடுத்த துணியும் இருக்க இடமும் அவர்களுக்குத் தர மனமில்லையா உனக்கு?
முதியோர் இல்லம் அது பல அன்பு தெய்வங்கள் வாழும் கோவில் தான்,
ஆனாலும் அந்த வயதான குழந்தைகள் உன் மனக் கோவிலில் தான் வாழ்வேன் என்றல்லவா முதியோர் இல்லத்தின் வாசலில் உனக்காக காத்துக்கிடக்கிறார்கள்!!
ஒன்றை மட்டும் நினைவில் கொள் பிள்ளைகளே!
முதியோர்களின் உலகம் மிகச்சிறியது!
அன்பு, பாசம், நேரம் இதை இன்று நீ அவர்களுக்குத் தந்தால் நாளை உன் வாழ்வு சொர்க்கமாகும்!
நாளை உனக்கும் நரை, திரை, மூப்பு வரும்!
இன்று நீ உன் பெற்றோர்க்குத் தரும் புறக்கணிப்பு நிச்சயம் நாளை உன் பக்கம் திரும்பும்!!
புரியவில்லையா?
இன்று உன் பெற்றோர்க்கு நீ கை காட்டிய முதியோர் இல்லக்கதவு நாளை உனக்காகத் திறந்திருக்கும்!
தயாராக இரு!
இன்று நாங்கள்! நாளை நீங்கள்! எழுதப்படாத விதி இதை மாற்றத்தான் உன்னால் முடியுமா?
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).