"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
சென்னை: "சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தி, எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இது போன்ற சோதனைகளால் நாங்கள் அஞ்சி விடுவோம் என அரசு நினைக்கிறது; ஆனால், நாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்," என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நேற்று அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது கடுமையான கண்டனங்களையும் விளக்கங்களையும் விரிவாகப் பதிவு செய்தார்.
சோதனையின் பின்னணி என்ன?
நேற்று முன்னாள் அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான எ.வ.வேலு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக அறப்போர் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக ஆதரவு :
சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு எதிராக எ.வ.வேலு கேள்வி எழுப்பியதால் தான் அவருக்கு எதிராக ரெய்டு நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டியது திமுக. மேலும் எ.வ.வேலுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகளை அவர் சட்டப்படி எதிர்கொள்வார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூறி இருந்தனர். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தவெக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்துவதாகவும் திமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
எ.வ.வேலுவின் விளக்கம்:
இந்நிலையில் நேற்று நடந்த ரெய்டு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எ.வ.வேலு, தன் மீதான புகார்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகளையும் முற்றிலும் மறுத்தார். அவரது பேட்டியில் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்திற்கும், தனக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக, வேண்டுமென்றே தங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. எனது இடத்தில் இருந்து ஒரு பைசா கூட அவர்களால் கைப்பற்றப்படவில்லை. திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய பொய்ப் பிரசாரங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். கரூர் சாலைப் பணிக்கான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பான எந்தவொரு கோப்போ அல்லது ஆவணமோ எனது தனிப்பட்ட இடத்திலோ அல்லது கல்லூரியிலோ இருப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!
இறுதியாகப் பேசிய அவர், "அதிகார பலத்தைக் கொண்டு எங்களை முடக்கிவிடலாம் என்று த.வெ.க அரசு நினைக்கிறது. ஆனால், நாங்கள் சட்டம் மற்றும் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த பொய் வழக்குகளையும் சோதனைகளையும் சட்டப்படி எதிர்கொண்டு, நாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் நிரூபித்துக் காட்டுவோம்," என்று உறுதியுடன் தெரிவித்தார்.