Tuesday Thoughts: விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!

Su.tha Arivalagan
Jun 02, 2026,10:45 AM IST

- லேணா, காரைக்குடி


திருமணம், புதுமனை புகுவிழா போன்ற குடும்ப விசேஷங்களுக்கு நாம் செல்லும்போது, அந்த நிகழ்வில் வழங்கப்படும் உணவு அல்லது ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்காக அல்ல; உறவுகளைப் பேணவும் வளர்க்கவும் என்பதற்காகவே செல்ல வேண்டும்.


இன்றைய காலகட்டத்தில் பலர், “சாப்பாடு நன்றாக இருந்தது”, “சாப்பாடு சரியாக இல்லை”, “அவர்கள் இப்படிச் செய்தார்கள், அப்படிச் செய்தார்கள்” என்று நிகழ்வுகளைப் பற்றிக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறையாகும்.


ஒரு திருமணமோ, கிரகப்பிரவேசமோ அல்லது வேறு எந்த குடும்ப நிகழ்வோ நடத்துவது எளிதான காரியம் அல்ல. பல்வேறு சிரமங்களையும், பொருளாதாரச் சுமைகளையும், சில நேரங்களில் கடன்களையும் எதிர்கொண்டு, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகே அந்த நிகழ்வுகளை நடத்த முடிகிறது.


அத்தகைய நேரங்களில், நம்மால் இயன்ற உதவிகளை கையால், உடலால் அல்லது வார்த்தைகளால் செய்தால் அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். “நிகழ்ச்சி மிகவும் நன்றாக நடைபெற்றது”, “நீங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்” போன்ற ஒரு நல்ல வார்த்தைகூட அவர்களின் மனதிற்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தரும்.




அதை விடுத்து, உணவு சரியில்லை, வந்தவர்கள் சரியில்லை, போனவர்கள் சரியில்லை என்று விமர்சனம் செய்வது உறவுகளை வலுப்படுத்தாது; மாறாக மனவருத்தத்தையே ஏற்படுத்தும்.


நாம் இவ்வாறான விசேஷங்களுக்கு செல்வது உணவு உண்பதற்காக அல்ல; உறவுகளை மதித்து, அவர்களுடன் நமது பாசப் பிணைப்பைத் தொடர்வதற்காகத்தான். எனவே, இனிவரும் காலங்களில் குடும்ப விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது, குறைகளைத் தேடாமல், உறவுகளை மேம்படுத்தவும், இயன்ற உதவிகளைச் செய்யவும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிரவும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.


அவ்வாறு நடந்துகொண்டால், குடும்ப உறவுகளும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறும்.