இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். சங்கர் கணேஷ் தனது இளமை பருவத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு 1967ம் ஆண்டு மகராசி திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக திரைப்பயணத்தை தொடங்கினார். எம்ஜிஆர் நடித்த ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தில் அவர் பெயர் பெற்றார். அதன்பிறகு 1980, 1990 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தார் எனலாம்.
குறிப்பாக தமிழில் மகராசி, ஆட்டுக்கார அலமேலு, சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் ஒரு இருட்டறை, சிதம்பர ரகசியம், ஆனந்த் கண்ணீர், சம்சாரம் அது மின்சாரம், ஊர்க்காவலன், என் ரத்தத்தின் ரத்தமே உள்பட 80க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று சுமார் 100க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூரில் இன்று மாலையில் திமுகவின் முப்பெரும் விழாவில் பாடல் பாடுவதற்காக சங்கர் கணேஷ் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.