தாய்ப் பிரிவின் ஏக்கம்
- எழுத்து மின்னல் பாத்திமா அப்றா
உதயம் எழும் பொழுதில், உன் அழைப்பு கேளாது
வெறும் சுவர்கள் மட்டுமே எதிரொலிக்கின்றன.
அடுப்பங்கரையில் எழும் அன்னத்தின் மணம்,
இன்று நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது.
வாயிற்படியில் கோலமிடும் ஓசை கேட்டு,
ஓடி வந்து பார்க்கிறேன்... நீயில்லை.
கைப்பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற அந்தப் பாதை,
இன்று தனிமையின் நிழலாய் நீள்கிறது.
நிலவொளி சன்னல் வழி நுழையும் போதெல்லாம்,
உன் முந்தானையின் வெண்மை நினைவில் வருகிறது.
"உறங்கு மகளே" என்று தலை வருடிய கரத்திற்காக,
தலையணை முழுவதும் கண்ணீரால் நனைகிறது.
விழாக்காலம் வந்தாலும், புத்தாடைகள் மகிழ்வளிப்பதில்லை.
அலமாரியில் மடித்து வைத்திருக்கும் உன் பழைய சேலை,
அதனை முகத்தில் பொத்திக் கொள்ளும் போது மட்டும்,
அரவணைப்பின் வெம்மை மீண்டும் கிடைக்கிறது.
மழைத்துளிகள் விழும் போதெல்லாம்,
"நனையாதே மகளே" என்ற உன் குரல் கேட்கிறது.
இங்கு குடை பிடிக்க ஆளில்லை.
நனைந்தே பழகிப் போனேன்.
தொலைபேசி ஒலிக்கும் ஒவ்வொரு முறையும்,
இதயம் "அன்னையோ" என்று துடிக்கிறது.
ஆனால் ஒலிப்பது அயலாரின் விசாரிப்புகளே.
எத்துணை தொலைவு சென்றாலும்,
எத்துணை உயரம் வளர்ந்தாலும்,
உன் மடியே உலகின் மிகப்பெரிய இல்லம்.
அந்த வாயில் திறக்கும் நாளுக்காக,
ஒவ்வொரு நாளையும் ஏக்கத்துடன் எண்ணுகிறேன்.
நீ இல்லாத இல்லம், இல்லமாகத் தெரியவில்லை.
நீ இல்லாத உணவு, உணவாகத் தெரியவில்லை.
நீ இல்லாத வாழ்வு...
அது வாழ்வாகவே தெரியவில்லை தாயே!