ரோட்டுல நடக்கும்போது இதையெல்லாம் இனி மனசுல வச்சிட்டு நடங்க பாஸ்!

Su.tha Arivalagan
Feb 13, 2026,03:13 PM IST

- ஜெனிட்டா ரீனா


சாலை பாதுகாப்பு என்பது சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்துகளைத் தவிர்க்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கையாகும். பெருகி வரும் வாகன நெரிசலில், சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பது ஒரு சமூகக் கடமையாகும். "நிதானம் நலம் தரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, சாலைகளில் அவசரத்தைத் தவிர்த்து பொறுமையுடன் பயணிப்பதே பாதுகாப்பிற்கு முதல் படியாகும்.


வாகனம் ஓட்டுபவர்கள் தற்காப்புக் கருவிகளான தலைக்கவசம்  மற்றும் சீட் பெல்ட்  அணிவதை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது கவனத்தை திசைதிருப்பி பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், அதிவேகம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமன்றி, சாலையில் செல்லும் மற்ற அப்பாவி பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.


போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சாலைக் குறியீடுகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பது விபத்துகளைப் பெருமளவு குறைக்கும். சாலைப் பாதுகாப்பு என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்பதால், ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் விபத்தில்லா தேசத்தை உருவாக்க முடியும்.


போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த டிப்ஸ் உங்களுக்காக:




1.தலைக்கவசம் : உயிர்க்கவசம் 

2. உரிமம் வாங்க எட்டுப்போடு; உயிரைக் காக்க ஹெல்மெட் போடு !

3. சாலையில் அலைபேசி! ஆபத்தாகும் நீ யோசி !

4. போதையில் பயணம்; பாதையில் மரணம் 

5. மிதவேகம் மிக நன்று.

6. சேமிக்க நினைத்தது சில நொடிகள்; சேதமடைந்தது பல உயிர்கள்.

7. வேகம் விவேகம் அல்ல.8.  சாலையில் முந்தாதே; வாழ்க்கையில் முந்து 

9. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதே !

10. அதிக சுமை ஏற்றாதீர்! ஆபத்தில் சிக்கி தவிக்காதே !

11. ஓடும் பேருந்தில் ஏறாதே; உயிரை பணயம் வைக்காதே !

12. சிவப்பு விளக்கை மதித்திடு ;ரத்தம் சிந்தாமல் பிழைத்திடு!

13. குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தாதே!

14. ஆம்புலன்ஸ் ,தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு 

15. மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே !

16. அதிக சத்தம் எழுப்பாதே மானிட ஆயுளை குறைக்காதே!

17. வாகனத்தில் வரும் புகை! வாழ்க்கைக்கு பெரும் பகை! 

18. சாலை விதிகளை பின்பற்று விபத்திலா வாழ்க்கையை உருவாக்கு!


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)