BCCI தலைவராகிறார் மிதுன் மன்ஹாஸ்.. காஷ்மீரைச் சேர்ந்தவர்.. சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்

Su.tha Arivalagan
Sep 21, 2025,11:56 AM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரான மிதுன் மன்ஹாஸ், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.


துலீப் டிராபிக்கான வட மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (JKCA) நிர்வாகியாக இருக்கிறார்.


மன்ஹாஸ் இந்திய அணிக்காக விளையாடியதில்லை. ஆனால் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், 157 முதல் தர போட்டிகளில், 9,714 ரன்கள் குவித்துள்ளார்.




தற்போது ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இவருக்குப் பதில் தற்போது மன்ஹாஸ் தலைவராகவுள்ளார். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் ஆகியோரும் பிசிசிஐ நிர்வாக பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனராம். 


ரோஜப் பின்னியைப் போலவே, ஐபிஎல்லின் தலைவர் பதவியும் விரைவில் காலியாகவுள்ளது. தற்போது ஐபிஎல் தலைவராக அருண் தூமல் இருக்கிறார். அவரது இடத்துக்கும் புதியவர் நியமிக்கப்படவுள்ளார். 


இதேபோல இன்னும் சில மாற்றங்களும் இடம் பெறவுள்ளது. தற்போது அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள எஸ். ஷரத் அதிலிருந்து நீக்கப்பட்டு, இளையோர் தேர்வுக் குழு தலைவராக மாற்றப்படவுள்ளார். ஷரத் இடத்தில் பிரக்யான் ஓஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.