சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
சென்னை: சட்டசபைக் கூட்டம் இன்று செம கலகலப்பு மோடுக்கு மாறியது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியபோது பலமுறை முதல்வர் விஜய் வாய் விட்டுச் சிரித்ததைப் பார்க்க முடிந்தது.
வழக்கமாக சட்டசபையில் விவாதம் நடைபெறும்போது முதல்வர் விஜய் அமைதியாக கவனித்தபடி இருப்பார். முகம் பெரும்போலும் சீரியஸாகவே இருக்கும். இதை எதிர்க்கட்சியினர் கூட விமர்சித்துள்ளனர். ஆனாலும் தனது பாணியை முதல்வர் கைவிடவில்லை.
இந்த நிலையில் முதல்வரையே சிரிக்க வைத்து விட்டார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இன்று சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, பலமுறை சபையை சிரிக்க வைத்தார். குறிப்பாக முதல்வர்தான், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை கேட்டுக் கலகலப்பான முகத்துடன் காணப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. மாடுகள் உள்ளன. அவரே டிராக்டர் ஓட்டுவார் என்று கூறியபோது முதல்வர் விஜய் கலகலவென சிரித்தபடி காணப்பட்டார்.
அதேபோல இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷைக் குறிப்பிடுகையில் சாமி அமைச்சர் என்று கூறியபோதும் சபை கலகலப்புக்கு மாறியது. முதல்வர் விஜய் ரமேஷைத் திரும்பிப் பார்தது வாய் விட்டு சிரித்தபடி காணப்பட்டார்.
நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்தையும் விடவில்லை, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். புஸ்ஸி ஆனந்த் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிறார். பிசியாக இருக்கிறார். அவரை பிசி ஆனந்த் என்றுதான் கூப்பிட வேண்டும் என்று கூறியபோது புஸ்ஸி ஆனந்த் குலுங்கிச் சிரித்தார். விஜய்யும் சிரித்த முகத்துடன் அதை ரசித்துப் பார்த்தார்.
அப்போது எழுந்த புஸ்ஸி ஆனந்த், சாதாரண வாய்க்கால் பிரச்சினையைக் கூட குறிப்பிட்டு எங்களிடம் விசாரிக்கும் முதல்வரைப் பெற்றுள்ளோம் என்று கூற அதற்கும் முதல்வர் விஜய்யால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அனல் பறக்கும் சபையில், இன்றைய காலைப் பகுதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் புண்ணியத்தால் சிரிப்பலையாக காணப்பட்டது.