எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

Meenakshi
Dec 09, 2025,03:53 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பன் மகன் கே.கே. செல்வம் இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கே.கே.செல்வம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். கே.கே.செல்வம் முதலில் அதிமுகவில் இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார்.


அவருக்கு திமுகவில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. அதன்பின்னர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.




இந்நிலையில், கே.கே.செல்வம் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது குறித்து கே.கே.செல்வம் பேசுகையில், திமுகவில் நியாமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. முதலமைச்சரின் பெயரைச் சொல்லி பல்வேறு தவறுகள் நடக்கிறது. இது போன்ற காரணங்களால் நான் அதிமுகவில் இணைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவில் உயர் மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்ச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.