தடுமாற்றத்திலிருந்து தலைசிறந்த மாணவனாக!

Su.tha Arivalagan
Feb 28, 2026,11:15 AM IST

- வே.ஜெயந்தி


“இந்த மாணவனை எப்படி சமாளிப்பது?” 


ஒரு நாள் வகுப்பறையில் நின்றபோது என் மனதில் எழுந்த கேள்வி அது. ஆனால் இன்று, அதே மாணவனை நினைக்கும் போது என் மனதில் பெருமை மட்டுமே நிரம்புகிறது.


ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கதை இருக்கிறது. சில கதைகள் பாடப்புத்தகங்களில் இல்லை; அவை ஆசிரியர்களின் பொறுமையிலும் அன்பிலும் எழுதப்படுகின்றன.


இது என் 7ஆம் வகுப்பு மாணவனின் மாற்றக் கதை.  தடுமாற்றத்திலிருந்து தலைசிறந்த நிலைக்கு உயர்ந்த ஒரு பயணம்.


ஆரம்பத்தில் அந்த மாணவன் வகுப்பில் அடிக்கடி குறுக்கீடு செய்தான். பாடம் நடக்கும் போது இடைமறித்து பேசுதல், நண்பர்களை கிண்டல் செய்தல், பணிகளை தவிர்த்தல்  இவை அவனின் தினசரி பழக்கங்களாகிவிட்டன.


ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் அது சிரமத்தை ஏற்படுத்தியது. அவரை தண்டிப்பது எளிது. ஆனால் நான் நினைத்தேன். “இந்த நடத்தையின் பின்னால் ஏதோ சொல்லப்படாத கதை இருக்கலாம்.” அதனால் நான் தண்டனையை விட புரிதலைத் தேர்ந்தெடுத்தேன்.




தனிப்பட்ட ஆலோசனை, சிறிய நல்ல செயல்களுக்குக் கூட பாராட்டு, அவனிடம் காட்டிய நம்பிக்கை  இவை மெதுவாக அவனுள் மாற்றத்தின் விதையை விதைத்தன.


ஒவ்வொரு சிறிய முன்னேற்றத்திற்கும் நான் பாராட்டினேன். அவன் கண்களில் ஒரு ஒளி பிறந்தது. அந்த ஒளியே அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது. சில வாரங்களில் கணிசமான மாற்றம் தென்பட்டது.


ஒருகாலத்தில் குறுக்கீடு செய்த மாணவன் இன்று வகுப்பில் கவனமாகவும் ஒழுக்கத்துடனும் நடந்து, நண்பர்களுக்கு உதவும் மாணவனாக மாறியுள்ளார். இன்று அவர் அனைவராலும் நேசிக்கப்படும், பொறுப்புணர்வுள்ள மாணவன்


மாணவர்களை அவர்கள் செய்த தவறுகளால் அல்ல, அவர்களின் திறமைகளால் காண கற்றுக்கொள்ள வேண்டும்.

தண்டனையை விட புரிதல் பலம் வாய்ந்தது.


கோபத்தை விட அன்பு ஆழமானது. அவநம்பிக்கையை விட நம்பிக்கை மாற்றத்தை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு ஒளி இருக்கிறது; அதை ஏற்றுவது ஆசிரியரின் பொறுப்பு.


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)