கூரைவீடும் வாழ்க்கையும்!

Su.tha Arivalagan
Nov 14, 2025,11:21 AM IST

- ஜி. யாஸ்மின் சிராஜூதீன்


கூரைவீடு ஏழ்மையின் அடையாளம்தான்....

ஏழையின் சொர்க்க பூமிதான்...!!!!


சின்னஞ்சிறிய கூடுதான் 

இன்பக் கடலாகும்தான்...!!!


மகிழ்ச்சி அலையும்தான் 

ஓயாது பொங்கும்தான்...!!!


வீட்டின்கூரையில் வானம்

தெரியும்தான் ...!!!


மழையும் உள்ளே தூவும்தான் 

பாத்திரம் நிரம்பி வழியும்தான்...!!!


வானம்ஓட்டை ஆனதோ ,எதை வைத்து அடைக்கனும் என்று,மனம் பரிதவிக்கும்தான்....!!!




 சூரியக்கதிரும் உள்ளே எட்டிப் பார்க்கும்தான் ...

ஒளியை அள்ளி வீசும்தான்...!!!

இயற்கை தந்த விளக்குதான்...!!!


சந்திரன் மாலையில் சந்திக்கும்தான் 

கூடவே சுற்றி சுற்றி விளையாடும்தான்.....!!!


இதமான ஒளியை தந்து அணைக்கும்தான்...!!!


கோளரங்கம் இல்லை இது

கூரை  வீட்டின் கூரைதான்..!!!


சில நேரம் மகிழ்ச்சிதான்...

பல நேரம் ஏக்கம்தான்...!!!


பல அறைகள் ஒன்றாய் கூடி 

ஒற்றுமையாய்... ஓர்அறையிலேதான் ...!!!


காலைக்கடன்களுக்கு வெட்டவெளியேதான் ...!!!


குளியலறை தட்டி அறையே                   கூரையாக வானமும்..

துணிக் கதவும் அசைந்தாடும்தான்...!!!


சர்ப்பம் உருட்டிலும் தரையிலும் தோட்டத்திலும் விளையாடும்தான்..!!!


மழைக்காலத்தில் தேள்கள் ஊர்ந்து 

வந்திடும்தான் ....!!!


மரவட்டைகள் தூக்கிஎறிய தூக்கம் 

தூங்காமல் விழிக்கும்தான் ....!!!


எறும்பு சாரை சாரையாக 

சென்றிடும்தான் ...!!!


குழந்தைகள் தொட்டிலில் தூங்கிடும் 

கவனம் கொள்ளனும்தான்...!!!


 குளிர்பதனப்பெட்டியாக 

காய்கறிகளின் சொகுசு அறையாக கட்டிலின் அடித்தளம்தான் ....!!!


சின்னஞ்சிறிய கூட்டிலே 

சுற்றம்சூழ விழாக்கள் களைகட்டிடும்தான்...!!!


இன்பமும் துன்பமும் நிறைந்த 

வாழ்கைதான்...!!!


விரும்பி வாழ்ந்தால் ஏற்றம் 

உண்டுதான்...!!!


சொல்லச்சொல்ல குறையாத 

தொடரும்தான்..!!!


கனவுகள் பல  ஏந்தி கூரை கம்பீரமாக நின்றிடும்தான் ....!!!


ஒருநாள் கோபுரமாக 

மாறுவோம்  என்று  எண்ணிதான்...!!!!


உழைப்பும் பொறுமையும் காலத்துடன் கை கோர்த்துதான்..!!!


கூரைவீடும் வாழ்க்கையும் உருண்டு 

ஓடும்தான்..!!!


எதிர்பார்ப்பு நிறைந்த எதிர்காலம் நோக்கித்தான்...!!!


கூரைவீட்டின் நினைவுகள் என்றும் 

அழியா சொர்க்க பூமிதான்..


பொறுமை காப்போம் காலம் 

பதில் சொல்லும்தான் ...!!!


அனுபவம் பேசிடும்  கூரைவீடும் 

வாழ்க்கையும்தான்  ....!!!

 

(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)