Namakkal Anjaneyar temple: ஹனுமன் ஜெயந்தி.. நாமக்கல்லில் களை கட்டிய ஆஞ்சநேயர் கோவில்

Swarnalakshmi
Dec 19, 2025,04:28 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 25 டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி நான்காம் நாள் அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம், உள்ளனர்.


வெள்ளிக்கிழமை 19ஆம் தேதி  அமாவாசையும், சனிக்கிழமை 20 ஆம் தேதி  மூலம் நட்சத்திரம் வருவதால் இவ்விரு நாட்களுமே ஆஞ்சநேய பகவானுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆகும். சுமார்1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர்,நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் நாமக்கல்லில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.




இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக அமைந்துள்ளது.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லை.வெட்ட வெளியில் மழையிலும்,வெயிலிலும், குளிரிலும், அதே பொலிவுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து தரிசனம் தருகிறார். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு (100008)லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி வழிபாடுகள் நடைபெற்றன.


நாமக்கல் ஆஞ்சநேயர் வரலாறு பற்றிய சிறு தகவல்களை பார்ப்போம்...

 

நாமக்கல் ஆஞ்சநேயர் பற்றிய வரலாறு: புராணகாலத்தில் மகாலட்சுமி தாயார், பெருமாளை பிரிந்து ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அச்சமயம் திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும்,ராமரும் மூர்ச்சை அடைந்தனர். ஆகையால் சாம்பவான் அறிவுரைப்படி சஞ்சீவி மூலிகையை பெறுவதற்காக இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். 


ஆஞ்சநேயர் அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும் போது இரண்டு துளை உள்ள சாளக்கிராமம் கிடைத்தது.இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனை தன்னுடன் எடுத்து வான் வழியாக வந்து கொண்டிருந்த நேரத்தில், சூரியன் உதயமானதால், ஆஞ்சநேயர் தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தை  தூக்க முயற்சித்தார்.ஆனால் அவரால் அதை தூக்க இயலவில்லை.


அப்போது ஒரு  அசி ரீரி ஒலி ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து விட்டு பிறகு என்னை வந்து எடுத்துச் செல் என்று கேட்டது. ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பின்னர் ஆஞ்சநேயர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து பார்க்க அவர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை இரு கைகள் கூப்பி வணங்கினார். இன்று நாம் தரிசிக்கும் ஆஞ்சநேயர் இரு கை கூப்பி வணங்கிய வண்ணம் இருப்பவர் இவரே. ஆஞ்சநேயர் கைகூப்பிய வண்ணம் அனுதினமும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நரசிம்மரை கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு சாளக்கிராம மாலை , வால் ஆகியவை உள்ளன. 


புராண காலத்தில் இந்த ஊருக்கு "ஸ்ரீ  சைலக்ஷேத்ரம்  " என்பது பெயராக இருந்தது.

 

அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர்.

அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர்.

ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர்.

அனைத்தையும் தந்து அருள் பவர் ஆஞ்சநேயர்.

எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரின் அருளையும், கருணையும் பெற்றால் வாழ்வில் அனைத்து வளத்தையும் பெற இயலும்.


தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதிகள் உண்டு. ராம பக்தர்களும், ஆஞ்சநேய பக்தர்களும்,சுற்றுலா பிரியர்களும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆகும்.


ஜெய் அனுமான்!


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.