சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!

Su.tha Arivalagan
Dec 24, 2025,04:19 PM IST

- ந. லட்சுமி


மன்னார்குடி: மோர்க்குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அருமையான ஒரு குழம்பு இது. சாப்பிட தனி டேஸ்ட்டாக இருக்கும். அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

      

மோர்க் குழம்பு மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:


தேங்காய் துருவல் –  1/2 கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு - 10 எண்ணிக்கை


புளிப்பு தேவை என்றால் ஒரு தக்காளி பழம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்


குழம்புக்கு தேவையான மற்ற பொருட்கள்:




புளித்த மோர் – 2 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

பெருங்காயக்கட்டி - சிறிது

கடலை மாவு - ஒரு டீஸ்பூன்

பச்சரிசி மாவு - ஒரு டீஸ்பூன்


காய்கறி (வெண்டைக்காய் / சுரைக்காய் / பூசணிக்காய் /சேமங்கிழங்கு/ முருங்கைக்காய்/ குட்டி குட்டி மசால் வடை/ குட்டி குட்டி குனுக்கு உருண்டை.

 

இது நம் விருப்பம் தான் என்ன காய்கறிகள் இருக்கிறதோ, என்ன தேவையோ அதை பயன்படுத்தி குழம்பு வைத்துக் கொள்ளலாம்) –  தேவைக்கு ஏற்ப

 

குழம்பு தாளிப்புக்கு:


தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

காய்ந்த மிளகாய் – 1 (காரம் விருப்பத்திற்கு ஏற்ப)

பச்சை மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - சிறிது

கொத்தமல்லி இலை சிறிது


செய்முறை:


1. முதலில் காய்கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர்  மஞ்சள்  உப்பு சேர்த்து மென்மையாக வேக வைக்கவும்.


2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சற்று தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.


3. வேகவைத்த காய்கறியில் அரைத்த விழுது, தேவையென்றால் உப்பு  சேர்த்து 2–3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.


4. பெருங்காயக் கட்டி சிறியதை கொதிக்கும் குழம்போடு சேர்த்து விடவும்.


5. கடலை மாவு பச்சரிசி மாவு சிறிது தண்ணீரில் கரைத்து குழம்போடு சேர்த்து விடவும்.


6. குழம்பு நன்கு கொதித்த உடன் தீயை குறைத்து, மோர் சேர்த்து நன்றாக கலக்கவும். கொஞ்சம் நுரை கட்டி வரும்போது இறக்கி விடுங்கள்.  கொதிக்க விடாதீர்கள் (கட்டியாகிவிடும்) .


7. கழுவி  சுத்தம் செய்த கருவேப்பிலை சிறிது, கொத்தமல்லி இலை சிறிது இரண்டையும் கிள்ளி இறக்கி வைத்த குழம்பில் சேர்த்து விடவும்.


8. தனி கடாயில் எண்ணெய் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பெருங்காயப் பொடி சேர்த்து  குழம்பில் ஊற்றவும். இப்போது கமகம மோர் குழம்பு தயார்.


சூடான  சாதத்துடன் பரிமாறவும். மோர் குழம்பிற்கு, காரமான வருவல் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால், அமிர்தம் போல் இருக்கும். 


புகைப்படம் உதவி: https://www.youtube.com/watch?v=-srEIp6MN1o


(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)