எண்ணெய் கிடையாது.. ஜஸ்ட் ஆவி மட்டுமே.. சூப்பரான டேஸ்ட்டியான பிடி கொழுக்கட்டை!
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed, B.A(Hindi)
எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய பிடி கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் வீடுகளில் கொழுக்கட்டை செய்யும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பிடி கொழுக்கட்டையை எப்போது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அவ்வளவு ஹெல்த்தியான டிஷ் இது.
இனிவரும் காலங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்குப் பதில் கொழுக்கட்டை கொடுத்து அனுப்புங்கள் .
பிடி கொழுக்கட்டை என்பது தமிழரின் பாரம்பரிய சமையலில் முக்கியமான ஒரு ஆரோக்கியமான உணவு வகையாகும்.
“பிடி கொழுக்கட்டை ” என்று பெயர் வருவதற்கு காரணம் கையில் அழுத்தி கொழுக்கட்டை பிடிப்பதால் இந்த பெயர் வந்தது.
தேவையான பொருட்கள்
பச்சரிசி 1கப்
சிவப்பு அரிசி அல்லது
பாரம்பரிய அரிசி 1 கப்
துருவிய தேங்காய் – 1கப்
ஏலக்காய் தூள் -சிறிதளவு
உப்பு – தேவைக்கு
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை -5 தேக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி ஒரு பங்கும், காட்டு யானம் சிவப்பரிசி போன்ற ஏதேனும் ஒரு வகை அரிசி ஒரு பங்கும் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அவற்றில் உள்ள நீரை வடிகட்டி ஒரு துணியில் உலர்த்த வேண்டும் .அவற்றை மிக்ஸியில் சற்று, கொற கொற எனஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மாவை நன்றாக பிசைந்து, துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் உப்பு சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
கையில் சிறிது மாவை எடுத்து விரல்களால் அழுத்தி பிடிக்க வேண்டும்.
தேங்காயில் உள்ள ஈரப்பதம் போதுமானது. நீர் சேர்க்க தேவையில்லை .
இனிப்பு தேவை என்றால் நாட்டு சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் சேர்த்து கிளறி எடுத்துக் கொள்ளலாம்.
இதனை இட்லி பாத்திரத்தில் அல்லது ஆவியில் வேக வைக்கும் முறையில் வைத்து 8–10 நிமிடம் ஆவியில் வேகவிட வேண்டும்.
சுவையான மற்றும் மிருதுவான பிடி கொழுக்கட்டை தயாராகிவிட்டது.
அரிசி மாவு மற்றும் தேங்காய் உள்ளதால் உடலுக்கு சக்தி தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றதாக உள்ளது.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இதனை மாதம் ஒரு முறையாவது கொடுத்து பழகுங்கள்.
குறிப்பு:
பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து கொடுப்பதை விட சிகப்பரிசி போன்ற பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தி கொழுக்கட்டை செய்து கொடுப்போம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)