தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் எவ்விதக் குழப்பமுமின்றித் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, வாக்குச் சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்துத் தேர்தல் ஆணையம் விரிவான விளக்கங்களை அளித்துள்ளது.
வாக்குச் சாவடிக்குள் நுழைந்தது முதல் வாக்களித்து வெளியேறும் வரை பின்பற்ற வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்:
1. வரிசையில் காத்திருத்தல் :
வாக்குச் சாவடிக்குச் சென்றவுடன், முதலில் அங்குள்ள வரிசையில் நின்று உங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
2. அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்கள் :
பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை கருதி, வாக்குச் சாவடிக்குள் அலைபேசி (Mobile Phone) கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்குச் சாவடிக்குள் நுழையும் முன் உங்கள் அலைபேசியைச் 'சுவிட்ச் ஆஃப்' (Switch Off) செய்ய வேண்டும். அங்குள்ள தேர்தல் பணியாளர்களிடம் அலைபேசியை ஒப்படைத்துவிட்டு, அதற்கான டோக்கனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. மூன்று கட்டச் சரிபார்ப்பு நடைமுறை :
வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும், மூன்று அதிகாரிகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்:
முதல் அலுவலர்: உங்கள் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப்பை (Booth Slip) சரிபார்ப்பார். உங்கள் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை உரக்கப் படிப்பார்; அதனை அங்கிருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள்.
2-வது அலுவலர்: உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைப்பார். பின்னர் உங்களிடம் கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் ரேகையைப் பெற்றுக் கொண்டு, உங்களுக்கான பிரத்யேக 'ஸ்லிப்' ஒன்றை வழங்குவார்.
3-வது அலுவலர்: உங்களிடமிருந்து அந்த ஸ்லிப்பை பெற்றுக்கொண்டு சரிபார்ப்பார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டாளர் பொத்தானை அழுத்தி, நீங்கள் வாக்களிக்க அனுமதிப்பார்.
4. ரகசிய வாக்கெடுப்பு முறை :
வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வைக்கப்பட்டுள்ள மறைவான பகுதிக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்தவும். உடனே ஒரு 'பீப்' (Beep) ஒலி கேட்கும்.
அருகிலுள்ள விவிபேட் (VVPAT) இயந்திரத்தின் திரையில், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது 7 வினாடிகள் தோன்றும். இது உங்கள் வாக்குச் சரியாகப் பதிவாகிவிட்டதை உறுதிப்படுத்தும்.
வாக்களித்து முடித்த பின், வெளியே வந்து உங்களிடம் இருந்த டோக்கனைக் கொடுத்து அலைபேசியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.