மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)

Maitreyi Niranjana
Sep 16, 2025,10:27 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


மனக் காயங்கள் ஏன் அடைகிறோம் ( Why do we get hurt?) மனக் காயங்கள் என்றால் என்ன?  சிலர் நம்மைப் பற்றி பேசிய சொற்கள் நம்மை அவமானப்படுத்தியதாக உணர்வதால் மனக் காயமடைகிறோம்..


நமக்கு வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் வாழ்க்கை நம்மை தண்டிப்பதாக உணர்கிறோம்… அதனால் காயமடைந்து அது பெரும் துன்பமாக (Wounds) மாறிவிடுகிறது..


ஏன் காயமடைகிறோம் என்பதைவிட “எது” காயம் அடைகிறது என்று ஆழமாக பார்த்தோமானால்.. நான் என்று நாம் கொண்டுள்ள பிம்பம் (Idea or image) என்பதை பார்க்க முடியும்..


இந்த கேள்வி நமக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று.. எல்லோருக்கும் வாழ்க்கை வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கிறது.. வாழ்க்கை அனுபவங்களால் காயம் அடையலாம் அல்லது ஞானம் அடையலாம்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா? 




காஷ்முஷ்  ஒரு ஞானியிடம் சென்றார்..


காஷ்முஷ் ஒரு பெரிய மன துன்பத்தில் இருந்தார்… ஞானி அவரிடம் ஏன் இவ்வளவு வருத்தமாக இருக்கிறாய் என்று கேட்டபோது.. எனக்கு வேலை போய்விட்டது.. என் மனைவி என்னை விட்டு சென்று விட்டாள்.. நான் 15 வருடங்களாக வேலை பார்த்த கம்பெனி ஒரே நாளில் என்னை தூக்கி எறிந்து விட்டதாக உணர்கிறேன்.. பத்து வருடமாக என்னுடன் வாழ்ந்த என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கை இவ்வளவு துன்பங்களை அளிக்கிறது.. எனக்கு செத்துப் போய்விடலாம் என்று தோன்றுகிறது.. அவள் போகும் போது பேசிய வார்த்தைகள் மிகவும் காயப்படுத்துவதாக இருந்தது என்று கண்களில் கண்ணீருடன் கூறினார்..


அவருடைய நிலைமையை பார்த்து அந்த ஞானிக்கும் மனம் இளகியது.. அவரை அருகே அழைத்து தன் அருகே உட்கார வைத்து அமைதியாக இருக்கும்படி கூறினார்.. இப்போது என்ன உணர்கிறாய் என்று கேட்க ஒரு ஆழமான அமைதி நிலவியது.. அவரின் மனக்கண்ணின் முன்னால்.. நடந்த சம்பவங்கள் ஒரு திரைப்படம் போல ஓடுவதை பார்த்தார்.. ஒரு நிகழ்ச்சி ஒருமுறை நடக்கிறது.. ஆனால் நமது மனம் அதை திரும்பத் திரும்ப ஓட்டி.. அதைச் சுற்றி பல கதைகளை புனைகிறது.. அந்தக் கதை நான் என்ற பிம்பத்தை சுற்றி நடக்கிறது..


ஒருமுறை நடந்ததை பலமுறை தன் மனதில் ஓட விட்டு எவ்வளவு துன்பம் அடைகிறோம் என்பதை காஷ்முஷ் பார்க்க ஆரம்பித்தார்.. இந்த நொடி பொழுதில்.. அது எதுவுமே இல்லை என்பதையும் பார்த்தார்.. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது அது வருத்தம் அளிப்பதாக இருந்தால் நாமே அந்த உணர்வாக இருக்கிறோம்... அது அந்த நொடியில் மட்டுமே உண்மை. 


ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி நடக்கும் போது நாமே அந்த சந்தோஷமாக இருக்கிறோம்.. அதைச் சுற்றி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சந்தோஷத்தையும்…நான் என்பதையும் பிரித்து பார்க்கும் போது.. அதை சுற்றி ஒரு கதை பின்னப்படுகிறது.. அதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுகிறோம்.. வருத்தமான சம்பவங்கள் நடக்கும்போது அதேபோல் நினைத்து நினைத்து வருத்தப்படுகிறோம்.. 


நாம் எப்போதெல்லாம் நினைவலைகளில் செல்கிறோமோ அப்போது இந்த நொடியை இந்த கணத்தை பார்க்க மறக்கிறோம்.. (Now is Life) ..


நான் என்பது ஒரு பிம்பம் மட்டுமே என்பதை தெளிவாக பார்க்க ஆரம்பித்தோமானால்.. இந்த கணத்தில் ஒவ்வொரு உணர்வுகளும் நடப்பதையும் நாமே அந்த உணர்வாக இருப்பதையும் பார்த்தோமானால்.. நமது மனம் நம் மீது கொண்டுள்ள பிடியிலிருந்து வெளிவர முடியும்..


யார் எது செய்திருந்தாலும்.. இதுவரை நாம் அடைந்த துன்பங்களை எல்லாவற்றையும் எழுதி எரித்துவிட்டோமானால்.. ஒரு ஆழமான விடுதலை உணர்வை அடைய முடியும்.. வாழ்க்கை பலரின் வழியாக நமக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கிறது.. Life is a Show.. நமக்காக நடக்கிறது.. ஆனால் நமக்கு எதுவுமே நடப்பதில்லை என்பதை பார்க்க ஆரம்பிக்கலாம்.. 


அப்போது தான் எல்லா மனக் காயங்களில் இருந்தும் வெளிவர முடியும்.. நமக்கு காயங்களை கொடுத்தவர்களையும் அன்பாக பார்க்க ஆரம்பிப்போம்.. அன்பு என்பது உறவுமுறை அல்ல.. நம்முடைய உண்மையான நிலை.. (Love is not a relationship but a state of Being) இந்த பிரபஞ்சத்தின் மீதும்.. எல்லா உயிர்களின் மீதும் ஒரு ஆழமான அன்பை உணர்வோம்.. 


நாம் தொடர்வோம்..


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.