இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது.
1925-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் எளிமையான விவசாயி குடும்பத்தில் பிறந்த இரா.நல்லகண்ணு, தனது 16வது வயதில் கம்யூனிஸ்ட் சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தமான இவர், மக்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எத்தனையோ உயர்ந்த பதவிகளை வகித்தும் தனக்கென எந்த சொத்தும் சேர்த்துக் கொள்ளாமல் கடைசி வரை எளிய வாழ்க்கையை வாழ்ந்த போராளி இவர்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நல்லகண்ணு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணுவை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பின்னடைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அவரது மறைவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.