இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

Su.tha Arivalagan
Jun 08, 2026,01:04 PM IST

 - தமிழ்மாமணி இரா. கலைச் செல்வி 


இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்  

நாண நன்னயம் செய்துவிடல். 


திருவள்ளுவரின் இந்த உன்னதமான குறள், 


தீமை செய்தவரைத் தண்டிக்கும் சிறந்த வழி அவர் வெட்கி  தலை குனியும் படி. அவருக்கு நன்மை செய்வதே ஆகும் ...

என  போதிக்கிறது 


இந்தத் தத்துவத்தை விளக்கும் ஒரு சிறுகதை இதோ




ஒரு சிறிய கிராமத்தில் சோமசுந்தரம் என்ற முதியவர் வாழ்ந்து வந்தார்.  அவர் மிகவும் அமைதியானவர், மற்றவர்களுக்கு உதவி செய்வதில்  அவருக்கு எப்போதும் தனி மகிழ்ச்சி.  அவர் தனது வீட்டின் முன்னே ஒரு சிறிய தோட்டம் அமைத்து, அதில் மிகவும் அரிய வகை  மருந்து செடிகளையும்,   பூச்செடிகளையும் , பலவகையான  பழ மரங்களையும்  நட்டு வளர்த்து வந்தார்.


அதே தெருவில் வேலன் என்ற ஒரு  இளைஞன் இருந்தான். அவனுக்குச் சோமசுந்தரத்தின் மேல் ஏனோ ஒரு தீராத பொறாமை. சோமசுந்தரத்தின் தோட்டம் செழிப்பாக இருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு மனதிற்குள்  எரிச்சலாக இருக்கும்.


ஒரு நாள் நள்ளிரவில், யாரும் பார்க்காத நேரத்தில், வேலன் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்து, சோமசுந்தரம் ஆசையாக வளர்த்த மாமரக் கன்றுகளை வெட்டி எறிந்துவிட்டு, வேலியையும் உடைத்துச் சேதப்படுத்தினான். மறுநாள் காலை இதைப் பார்த்த சோமசுந்தரம் மிகுந்த வேதனையடைந்தார். ஆனால், அவர் கோபப்படவில்லை. வேலன் தான் இதைச் செய்தான் என்பது அவருக்குத் தெரியும். 


ஊர் மக்கள் "அவனைப் போலீசில் பிடித்துக் கொடுங்கள்" என்று சொல்லியும் அவர் அமைதியாக இருந்துவிட்டார். சில வாரங்கள் கழிந்தன. வேலனின் தந்தை திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அவசரமாக ஒரு குறிப்பிட்ட வகை மூலிகை மருந்து தேவைப்பட்டது. அது அந்த ஊரில் எங்கும் கிடைக்கவில்லை, பக்கத்து நகரத்திற்குச் சென்றுதான் வாங்க வேண்டும். மேலும் அன்றைய தினம் கனமழை பெய்து கொண்டிருந்ததால், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. வேலன் செய்வதறியாது திகைத்து நின்றான்.


அப்போது, யாரோ ஒருவன்   மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு வந்து ,வேலனின் வீட்டுக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த வேலன் அதிர்ந்து போனான். அங்கே சோமசுந்தரம் கையில் அந்த மருந்துப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார்.


"வேலா, உன் தந்தைக்கு இந்த  மூலிகை மருந்துதான் தேவை என்று கேள்விப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் இது கையிருப்பில் இருந்தது. முதலில் அவருக்கு இதைக் கொடு," என்று கனிவுடன் கூறினார். மருந்தை வாங்கிய வேலனின் கைகள் நடுங்கின. தான் செய்த தீமையையும் மறந்து, தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவும் அந்தப் பெரியவரின் குணத்தை எண்ணி அவன் உள்ளம் கூசியது.


"ஐயா, நான் உங்கள் தோட்டத்தைச் சிதைத்தவன்... எனக்கு ஏன் உதவுகிறீர்கள்?" என்று அழுதுகொண்டே கேட்டான்.


சோமசுந்தரம் புன்னகையுடன் சொன்னார், "தவறு  செய்வது மனித இயல்பு தம்பி. நீ செய்ததற்காக நான் உனக்குத் தண்டனை கொடுத்தால்,  உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?  இப்போது உன் தந்தை நலமடைவதுதான் முக்கியம்." என்றார்.


சோமசுந்தரத்தின் அந்த அன்பான செயல், வேலனின் மனதை அடியோடு மாற்றியது. தான் செய்த தவறுக்காக அவன் உண்மையாகவே வருந்தி,  அந்தத் தோட்டத்தை மீண்டும் சீரமைத்துக் கொடுக்க  உறுதி பூண்டான்.


கதை உணர்த்தும் நீதி:


தீமை செய்தவனைத் தண்டிக்க அவனோடு சண்டையிடத் தேவையில்லை; 

அவன் வெட்கப்படும் அளவிற்கு அவனுக்கு ஒரு நன்மையைச் செய்தால், அவனுடைய மனசாட்சியே அவனைத் திருத்திவிடும். 


இதுவே "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்ற திருக்குறளின்  உண்மையான விளக்கம் ஆகும்.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)