எதையும் தாங்கி நிற்கும்.. ஒரு மௌன மலை…!

Su.tha Arivalagan
Nov 19, 2025,03:04 PM IST

- சுகுணா கார்த்திகேயன்


என் கண்முன் நடமாடும் தெய்வம்


உன்னைப் பற்றி எழுத வரும் கையில்

அஞ்சலே வரும்…

ஆண்களின் தினம் என்றாலே

என் உள்ளம் முதலில் நினைப்பது

உன் மென்மையான நிழல்…

எதையும் தாங்கி நிற்கும்

ஒரு மௌன மலை…




உன் கண்களில் அன்பு, கருணை மட்டும்,

அக்கா–தங்கை–அம்மா–அத்தை

யார் வந்தாலும்

ஒரே அளவு கருணை!

உறவுகளைக் காணும் போது

உன் உள்ளே ஓடும்

தாரக மந்திரம்

“அன்பு… அன்பு… அன்பு…”

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க என வாழும் புனிதன்

ஒரு உயிர்க்கும்

தீங்கு நினைக்கத் தெரியாத

பொன்னான மனம்—

யாராவது உன்னை ஏமாற்றினாலும்

“அவர்கள் சரிதான்…

ஏமாந்தது நான்…”

என்று சிரிப்பாய்…

உன்னை போல் புனிதம்

அனுதினம்

கோவிலுக்கு செல்பவரிடத்திலும் நான் காணவில்லை. 

உன் பக்குவம்


பணி சுமை என்று சொல்ல

உன் நெஞ்சம் பழகவில்லை,

ஆனால் அங்கோர் மேல் அதிகாரி

ஒரு கடும் வார்த்தையிட்டாலே

மனசு உடைந்து

“வேலை விட்டு போய்விடலாமோ என்று தோன்றி…

மனம் வலிக்குது…”

என்று மெதுவாக சொல்வாய்…


மீண்டும் உன்னை

வேலைக்கே திருப்பிவிடுவது

எது தெரியுமா? நீ கூறிய வார்த்தை

“முதலில் உன் சிரிப்பு…

அதற்கு பின் மகள்களின் சிரிப்பு…

அதுக்கு அப்புறம்

என் வலி சின்னது தானே…”

என்று கூறும் உன்

எளிய புன்னகை.


கணவன் அடிக்க வேண்டும், திட்ட வேண்டும்

அது நன்றாக இருக்கும்  என்பார்கள் சிலர்…

அதை அனுபவிக்க என் வீட்டில் நான் உருவாக்கும்

சின்னச் சின்ன புயல்களையும் கூட

அமைதியான கடல்போல்

“மன்னிச்சுடு…

கடைசிவரை மகிழ்ச்சியா இருப்போம்…

எனக்கு நீ… உனக்கு நான்…”

என்று தழுவும் உன் சாந்தம்

இல்லறம் என்னும் கோயிலின்

விழா இசையாகிறது.


தனக்குப் பிடித்ததையே

காணும் உலகம்,

ஆனால் நீ மட்டும்

உன்னை மறந்து

எங்களைப் பற்றி மட்டும்

யோசித்து வாழும்

புனிதன்.


எதையும் மறைக்கத் தெரியாது

என் கண்முன்னே

நடமாடும்

ஒளிவான தெய்வமே!


சர்வதேச ஆண்களின் தினம்

என்பது உலகிற்கான நாள்

ஆனால் எனக்கோ,

ஒவ்வொரு தினமும்

உன்னைத் துதிக்கும் திருநாள்…


—இது என் காதலனுக்கும்,

என் கணவனுக்கும்,

என் வாழ்வின் தெய்வம்

உனக்காக எழுதப்பட்ட

ஆண்மையின் அன்பு மடல்.


(எழுத்தாளர் சுகுணா கார்த்திகேயன் குறித்து.. இல்லத்தரசி, எழுத்தாளர், இறைவழி மருத்துவர். இரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர்)