அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.
எந்தப் பக்கம் பார்த்தாலும் வெயில் அடிக்குது.. மழையைக் கூட சமாளிச்சுரலாம் போல.. இந்த கொளுத்தும் வெயிலை சமாளிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
இதுல அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கப் போகுதாம்.. இப்ப மட்டும் என்ன ஐஸ் நட்சத்திரமாக அடிச்சிட்டிருக்கு.. தரையில் முட்டையை உடைச்சு ஊத்துனா.. டக்குன்னு ஆம்லேட் ஆயிரும். அப்படி அடிக்குது வெயிலு.
கொளுத்தும் வெயிலில் டென்ஷனாகியுள்ள மக்களுக்காக ஜில்லுன்னு 3 ஜோக்ஸ் கொண்டு வந்திருக்காங்க நம்முடைய எழுத்தாளர் தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.. வாங்க படிச்சுக் கூலாவோம்!
இப்பவே நான் ரெடி சார்!
நேர்காணல் செய்பவர்: எங்க கம்பெனிக்கு ரொம்பவும் சுறுசுறுப்பான, வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கிற ஒரு ஆள் வேணும். உங்களுக்கு அந்தத் தகுதி இருக்கா?
விண்ணப்பதாரர்: தாராளமா இருக்கு சார். அதனாலதான் நீங்க இன்னும் வேலைக்கே எடுக்காத போதே, அடுத்த மாசம் எனக்கு 'லீவு' வேணும்னு இப்பவே லெட்டர் எழுதி எடுத்துட்டு வந்துட்டேன்!
--
நூறு வாட்டி போன அனுபவம் இருக்கு சார்!
மேனேஜர்: இந்த வேலைக்கு அஞ்சு வருஷம் அனுபவம் வேணும்னு விளம்பரத்துல போட்டிருந்தோமே... உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?
விண்ணப்பதாரர்: நிச்சயமா சார்... கடந்த அஞ்சு வருஷமா இதே மாதிரி நூறு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணின அனுபவம் எனக்கு இருக்கு சார்!
--
3வருஷம் கழிச்சே வந்துர்றேனே!
முதலாளி: ஆரம்பத்துல உங்களுக்கு மாசம் 15,000 ரூபாய் சம்பளம் தருவோம். மூணு வருஷம் கழிச்சு அது 40,000 ரூபாயா உயரும். ஓகேவா?
விண்ணப்பதாரர்: ரொம்ப சந்தோஷம் சார்... அப்போ நான் நேரா மூணு வருஷம் கழிச்சே வேலைக்கு வந்துடுறேன்.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)