Phantom கதாபாத்திரத்துக்கு வயது 90.. அதை விடுங்க.. இரும்புக் கை மாயாவி தெரியுமா?

Su.tha Arivalagan
Feb 23, 2026,01:52 PM IST

- மு. ராதிகா தேவி


இன்று whatsapp குழு ஒன்றில்  ஒரு செய்தி வந்தது - 'Phantom கதாபாத்திரத்துக்கு வயது 90 என்று'. அதை படித்தவுடன் எனக்கு இரும்புக் கை மாயாவி நினைவுக்கு வந்தது. 


உங்களில் எத்தனை பேருக்கு  இரும்புக் கை மாயாவியைத் தெரியும் என்று தெரியவில்லை. 1971 இல் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். என்னை போன்ற 60 's கிட்ஸ் எல்லோருக்கும் பரிச்சயமானவர் இரும்புக் கை மாயாவி. அன்று பேட்மேன் ஸ்பைடர்மேன் எல்லாம் கிடையாது. இரும்புக்கை மாயாவி தான் எங்களுக்கு ஹீரோ. 


இரும்புக்கை மாயாவியின் ஒரு கை மட்டும் இரும்பால் ஆனது. கரெண்ட் மேல் அந்த கையை வைத்தால் மாயாவி மாயமாக மறைந்து விடுவார். அந்த கை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அது மிதந்து மூலை முடுக்கில் நுழைந்து எதிரிகளின் கோட்டைக்குள் சென்று விடும். சார்ஜ் இருக்கும் வரை இரும்புக்கையின் ஆட்சி தான். ஒரு விரலில் இருந்து விஷப்புகை, ஒரு விரலில் இருந்து மின்சாரம், ஒரு விரலில் இருந்து துப்பாக்கி குண்டு....மாயாவியால் முடியாதது எதுவும் கிடையாது. 




நியூ யார்க், லண்டன், என்று இன்டர்நேஷனல் அளவில் அவர் தான் பெரிய ஹீரோ. சார்ஜ் போய் விட்டால் மெதுவாக மாயாவியின் உருவம் தெரிய ஆரம்பித்து விடும். ஒவ்வொரு கதையிலும் ஒரு முறையாவது அவர் இப்படி மாட்டி கொண்டு பின் தப்பிப்பார். 


அன்று டிவியே  கிடையாதே. புத்தகங்கள் மட்டும் தான். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம், ஒரு கதை... செம த்ரில்.  எங்களைப் போல் சிவகாசிகாரர்களுக்கு இரும்புக் கை மாயாவி ரொம்பவே நெருக்கம்.  ஏன் தெரியுமா? அது சிவகாசியை சேர்ந்த முத்து காமிக்ஸ் வெளியீடு. 


முத்து காமிக்ஸ் பங்குதார்களின் ஒருவரான சௌந்தரபாண்டியன் அவர்களின் brain child தான் இரும்புக்கை மாயாவி. அவரது மகன் முத்துவிஜயன் என்னுடைய வகுப்பு தோழன். பத்து வயதிலேயே ஒரு நல்ல கதை சொல்லி. தினம் எங்களின் மதிய உணவு இடைவேளை அவனுடைய கற்பனையில் இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள் பற்றிய கதைகளோடு தான் கழியும். சாப்பிட மறந்து கண்கள் விரிய கதை கேட்டுக் கொண்டு இருப்போம். 


பின்பு பங்குதாரர்கள் பிரிந்து முத்து காமிக்ஸ் காணாமல் போய் விட்டது. முத்துவிஜயன் குடும்பத்தினர் அதைத் தொடர வேண்டும் என்று லயன் காமிக்ஸ் என்று ஒரு நிறுவனத்தை தொடங்கினார்கள். இன்டர்நெட் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து, பல வெளியீட்டு நிறுவனங்கள் மறைந்து போய் விட்டன அல்லவா? அதில் லயன் காமிக்ஸ்சும் ஒன்று. 


டிஜிட்டல் உலகத்தில் நாம் தொலைத்தவை என்று பட்டியல் போட்டால் அது மிக நீளமாக இருக்கும். அதில் காமிக்ஸ் புத்தகங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஒரு நல்ல விஷயம். இரும்புக்கை மாயாவி கதைகள் இன்றும் இன்டர்நெட்டில் சில வலைத்தளங்களில் உள்ளன. நேரமும் ஆவலும் இருந்தால் வாசித்து பாருங்களேன். 


(இரும்புக்கை மாயாவிக்கு சமர்ப்பணம் )


(மு. ராதிகா தேவி , சிவகாசி)