கை விட்டுப் போகாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது ஏன்.. காங்கிரஸ் ஏதாவது திட்டம் தீட்டுதா?

Su.tha Arivalagan
Oct 10, 2025,06:14 PM IST

திண்டு்க்கல்: திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஒரு மறைமுகமான கருத்தைச் சொல்லியது பேசு பொருளாகியுள்ளது. 


அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் உடனிருந்தார். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நான் மேடைக்கு வருவேனா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என் கைகளுடன் வருவேனா என்று யோசித்தேன். ஆனால் 'கை' நம்மை விட்டுப் போகாது" என்று பேசினார்.


இந்தக் கருத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான 'கை'யைக் குறிப்பிட்டுப் பேசப்பட்டதால், காங்கிரஸ் கட்சி தவெக கட்சியுடன் நெருங்கி வருவதாக வரும் யூகங்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றது. அதேசமயம் தனது பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்குகையில், நான் என் கையைப் பற்றியும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றியும் பேசினேன் என்று விளக்கம் அளித்து, அரசியல் ரீதியான உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினார்.




இருப்பினும், காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருவதால், அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தக் கருத்தையும் புறம் தள்ளி விட முடியாத நிலையே உள்ளது.


கரூர் சம்பவத்திற்குப் பிறகு எந்த அரசியல் தலைவரும் விஜய்யிடம் பேசவில்லை. அவரை கடுமையாக விமர்சிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக விஜய்யிடம் போனில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினின்  பேச்சும் வந்துள்ளது.


வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் அதிக சீட்களை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் ஆட்சியில் பங்கு கேட்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டையும் திமுக ஏற்காது, ஏற்கவும் வாய்ப்பில்லை. மறுபக்கம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலரும் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நடக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.