Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா? என்ற சந்தேகம் இருக்கிறதா?
ஒவ்வொரு குடும்பத்தினரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. வாங்க தெரிந்து கொள்வோம்.
சீட்டு விளையாட்டு சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்பதை அறிந்திருப்போம். பணத்திற்காக சீட்டு விளையாடுவது தவறு என்று தெரிந்திருப்போம். இதைத் தவிர மற்ற தகவல்கள் பலரும் தெரிந்து கொள்வதில்லை.
குழந்தைகள் சீட்டு விளையாடுவதில் ஈடுபடும் போது, அவர்கள் கணிதத்தின் அடிப்படை எண்ணிக்கைகளையும் ,கணக்கீடுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக எல்லா நேரங்களிலும் சீட்டு விளையாட அனுமதிக்க கூடாது . குழந்தைகள் சீட்டு விளையாடும் பொழுது கட்டுப்பாடாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் சீட்டில் செலவிடாமல், அவர்களின் படிப்பு மற்றும் ஆர்வங்களை சமநிலைப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகள் வாழ்க்கையில் சமநிலையுடன் வளர்ந்து, நல்ல கணிதப் புரிதலும், பொறுமையும் பெற முடியும்.
பெரியவர்கள் தொடர்ந்து சீட்டு விளையாடுவது மற்றும் சீட்டு விளையாடுவதை பார்ப்பது நல்ல பழக்கம் கிடையாது. இதனை ஆரம்பத்தில் பார்க்கும் பொழுது ஆர்வம் அதிகமாக காணப்படும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து
அந்த ஆர்வம் நம்மையும் விளையாட தூண்டும்.
நாமும் விளையாண்டு பார்ப்போம் என்ற எண்ணம் வந்துவிடும். அதன் பிறகு நாம் நேரத்தை வீணாக்கிக் கொண்டு சீட்டு விளையாடுவதை வழக்கமாக வைத்துக் கொள்வார்கள் .
சிலர் ஆரம்பத்தில் குறைவான பணம் வைத்து விளையாடுவார்கள். நாட்கள் செல்ல செல்ல அதிக பணத்திற்கு விளையாடுகிறார்கள். சூதாட்ட பழக்கம் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு
மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
நண்பர்களிடையும் , உறவினர்களிடையும் சண்டைகள் வர ஆரம்பிக்கும். பெற்றோர்கள் விளையாடுவதை பார்த்து குழந்தைகளும் அவர்களைப் போல் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள்.
நிறைய நபர்கள் அதிக பணத்திற்கு விளையாடுவது தான் சூதாட்டம் என்றும்,நண்பர்களுடன் குறைவான பணத்திற்கு விளையாடுவது சூதாட்டம் இல்லை என்றும் கருதுகிறார்கள்.இது முற்றிலும் தவறு என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
பணத்திற்காக சீட்டு விளையாடுவது உடல் மற்றும் மனநலம் பாதிக்கபப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம். அந்த எண்ணத்தில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு நேரத்தை பயனுள்ள செயல்களில் செலவிடுவோம்.
நல்ல நண்பர்களுடன் நல்ல செயல்களில் நீண்ட நேரம் செலவிடுவது சிறந்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம். பெற்றோர் அல்லது வயதானவர்கள் கூறும் நல்ல அறிவுரைகளை கேட்டு வாழ்வில் பின்பற்றுவோம். தீய பழக்கங்களை தவிர்ப்பது நம் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)