மறதிக்கு மருந்து!
- மு. ராதிகா தேவி
நாளைக்குல இருந்து வல்லாரை கீரையை அரைச்சு அரைச்சு குடிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். ஏன்னு கேக்குறீங்களா? மேல படிங்க. அப்புறம் ஏன்னு கேக்கவே மாட்டீங்க.
ஜன்னலில், சாப்பாடு மேசையில், டீப்பாயில், சமையலறையில், படுக்கை அறையில், டிவிக்கு பக்கத்தில் என்று ஓடி ஓடி தேடிக்கொண்டு இருந்தேன். என் கணவர் பார்த்துக் கொண்டே இருந்தார். 'பார்த்துட்டே இருக்கீங்களே, நீங்களும் தேடுங்களேன்' என்றேன்.
'என்ன தேடுறன்னு தெரிஞ்சா தானே தேட முடியும்?' 'என்னோட கண்ணாடியை தேடுறேன் பேப்பர் படிக்கிறதுக்கு.' என் கணவர் என் தோள் தொட்டு அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிறுத்தினார்.
'ஐயோ இந்த கண்ணாடியை தேடலை. என்னை லூசுன்னு நினைச்சீங்களா?'. நல்லா கண்ணாடியை பாரு. உன்னோட கண்ணை பாரு. நீயே உன்னை லூசுன்னு தான் நினைப்ப.' என்கிறார். உற்றுப் பார்த்தால் என் கண்களிலே தான் கண்ணாடி இருக்கிறது. ஹி ஹி என்று ஒரு அசட்டு சிரிப்புடன் 'கொஞ்சம் ஞாபக மறதி' என்று சொல்லி சமாளித்தேன்.
இது காலையில் நடந்தது. இரவு... கட்டிலுக்கு அடியில் டார்ச் அடித்துத் தேடிக் கொண்டு இருந்தேன். அப்பொழுதும் என் கணவர் ஆஜர். 'இப்போ என்ன தேடுற?' 'என்னோட போன் கட்டிலுக்கு அடியில விழுந்துருச்சுனு நினைக்கிறன். எனக்கு கால் பண்ணுங்க. ரிங் அடிக்கும்', என்றேன்.
'அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல. கீழ இருட்டா இருக்கே. எப்படி கண்ணு தெரியுது? என்கிறார். 'டார்ச் வெளிச்சம் இருக்கே. அது போதுமே.'. 'சரி, எந்த டார்ச்?' 'என் போனோட டார்ச்'. 'அச்சச்சோ. போனை கையில வச்சிக்கிட்டு அதோட டார்ச்சையே அடிச்சுட்டு போனையே தேடுறேனே! எனக்கு என்ன ஆச்சு?'
இப்போ சொல்லுங்க வல்லாரையை அரைச்சு குடிக்கட்டுமா இல்ல வேற எதாவது வழி இருக்கா?
(மு. ராதிகா, சிவகாசி)