இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடும் போதை.. இணைந்து ஒழிப்போம்

Su.tha Arivalagan
Jun 26, 2026,03:04 PM IST

- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா


ஜூலை 26 ஆம் நாள். உலக போதை பொருள் ஒழிப்பு தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  கல்வியை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள் சிலர் இன்று போதைப் பொருள்களை தன் சட்டை பாக்கெட்டுகளிலும் பேண்ட் பாக்கெட்டுகளிலும் மறைத்து வைத்து தங்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறார்கள். 


மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. ஆகவே பெற்றோர்களும், சமுதாயத்தில் உள்ளவர்களும் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு ஏற்ற தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


ஆசிரியர்களுக்கு வாய்ச்சொல் ஒன்று மட்டுமே பிரதானமாக உள்ளது. மாணவர்களை திருத்துவதற்காக முயற்சி எடுத்து கண்டித்தால் பிரச்சனையின் கோணம் வேறு திசைக்கு சென்று விடுகிறது.அதனால் இன்றைய சூழலில் ஆசிரியர்கள் கைகட்டி வாய் பேச முடியாத ஆசான்களாகவே இருக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல் போகிறது. 




இதற்கு என்ன காரணம் ?அவர்களுக்கு கிடைத்த மித மிஞ்சிய துணை நிற்கும் சட்டங்களா? சமூக அமைப்புகளா? என்பதை நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் ;பின்னே இனிக்கும். அதுபோல ஆசிரியர்களின் கண்டிப்பை ஏற்றுக் கொள்கிற மாணவர்கள் வாழ்வின் வளர்ச்சியின் உயரத்திற்கு செல்கிறார்கள். 


நான் என்ன செய்தாலும் என்னை கேள்வி கேட்க உமக்கு உரிமை இல்லை என்ற மனோபாவத்தில் இருக்கும் ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறை ஒத்துக் கொள்ளவே தயங்குகிறார்கள். போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு அதன் மூலப் பொருட்களின் உற்பத்தியை தடை செய்தாலே மாணவர்களிடம் போதைப் பொருள் வந்தடைவதை எளிதில் தடுத்து விடலாம். இதில் அரசும் ,சமூக ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் ;துணை நிற்க வேண்டும் .


பெற்றோர்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். தவறான நட்பு வட்டத்திற்குள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருள் மாணவர்களின், இளைஞர்களின், குடும்பத்தின் எதிர்கால வாழ்வை சூறையாடுகிறது. இதை தடுக்க ஒட்டுமொத்த சமுதாயமும் மாணவர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)