10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
கோபிசெட்டிபாளையம் : அதிமுக தலைமைக்கு செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் மீண்டும் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் சொல்ல வந்த மெசேஜ் யாருக்கு? எதை உணர்த்த வருகிறார்? என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, பிறகு மனம் திறக்கிறேன் என்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை பொதுச் செயலாளர் இன்னும் 10 நாட்களில் முன்னெடுக்க வேண்டும் என பேசி கட்சி தலைமைக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்தார். இதனை அடுத்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. ஆனால் கட்சித் தலைமுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவர் மற்றவர்களைப் போல கட்சியை விட்டு நீக்கப்படவில்லை.
கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டையன் மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என புறப்பட்டு சென்றார். ஹரித்வார் செல்லும் வழியில் டில்லி சென்றதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அமித்ஷாவிடம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியதாக செங்கோட்டையன் தெரிவித்தார். அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த பிறகு அமைதி காத்து வந்த செங்கோட்டையன் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக தலைமைக்கு செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது தான் எனது நோக்கம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்பது தான் அறிஞர் அண்ணாவின் கொள்கை. அதிமுக.,வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று தான் அன்று மனம் திறந்து பேசினேன். எனது பேச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. புரிகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.
செங்கோட்டையன் பேசியதில், மறப்போம் மன்னிப்போம் என்பது அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என மீண்டும் ஒரு வலியுறுத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை எதற்காக அவர் குறிப்பிட்டார்? இதன் மூலம் யாருக்கு, என்ன மெசேஜ் அவர் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.