காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
- ஆ.வ. உமாதேவி
நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி தான் இது. இந்த பழமொழியை மேலோட்டமாக பார்த்தால்,"வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்" என்ற பொருளைத் தருகிறது. இப்படி சாதாரண பொருளை தரக்கூடிய ஒரு பழமொழியை நம் முன்னோர் சொல்லி இருப்பார்களா? என நாம் சற்று யோசிக்க வேண்டும்.
அறுவடையின் பொழுது களத்து மேட்டில் பயிர்களை அறுத்துப் போட்டு, அவை காய்ந்த பின் அவற்றை நன்றாக அடித்து, பதர்களைப் பிரிப்பதற்காக தூற்றுவார்கள். இங்கும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பொருந்தவில்லை. ஏனெனில், வருடத்தில் காற்று மிகுதியாக வீசும் காலம் ஆடி மாதம். ஆனால், அப்போது அறுவடை நடப்பதில்லை "ஆடிப்பட்டம் தேடி விதை" என்னும் பழமொழியை பின்பற்றி ஆடி மாதத்தில் தான் விதைப்பார்கள். பிறகு தை மாதத்தில் அறுவடை செய்வார்கள்.
தை மாதத்தில் அவ்வளவாக காற்று இருக்காது. எனவே, இங்கும் மேற்கண்ட பொருள் பொருந்தவில்லை. அப்படி என்றால் இப் பழமொழியின் உண்மை பொருள் தான் என்ன? தெரிந்து கொள்வோமா!
"காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்"
இங்கு காற்று என்பது நம்முடைய மூச்சுக்காற்றை குறிக்கிறது. சாதாரண மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறையும் ஒரு நாளில் 21 ஆயிரத்து 600 முறையும் மூச்சு விடுகிறான். இதில் உண்ண, உறங்க, பணியாற்ற, விளையாட என பல்வேறு வகையில் மூச்சை செலவிடும் மனிதன், சில மூச்சுக்காற்றை இறையருளைப் பெற செலவிடு என்ற கருத்தை உணர்த்தவே நம் முன்னோர்கள், மூச்சுக்காற்றை கவனித்து தியானம் செய்வதை வலியுறுத்தவே, காற்று உள்ள போதே (மூச்சுக்காற்று) (இறைவனை) துதித்துக்கொள் என்ற பழமொழியை சொல்லி வைத்தனர்.
பின்னாளில், துதித்துக்கொள் என்பதே தூற்றிக்கொள் என்று மருவி, நடைமுறையில் வந்து விட்டது பழமொழியின் உண்மை பொருளை உணர்ந்த நாம் இன்று முதல், நம் மூச்சை கவனித்து தியானம் செய்வோமா நண்பர்களே!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)