டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டைச் சமாளிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு (Cloud seeding) சோதனைகள், அதாவது செயற்கை மழை முயற்சியானது, மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) குழுவினர் நேற்று இரண்டு கட்ட சோதனைகளை மேற்கொண்டனர், ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் இந்த முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை.
டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவிலேயே இருந்து வருகிறது. இதை சரி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த செயற்கை மழை முயற்சி. இதுகுறித்து கான்பூர் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ள தகவலில், இன்று (அக்டோபர் 29, 2025) திட்டமிடப்பட்ட மேக விதைப்பு செயல்பாடு மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளை முற்றிலும் சார்ந்துள்ளது.
ஈரப்பதத்தின் அளவு சுமார் 15 முதல் 20 சதவிகிதம் மட்டுமே இருந்ததால், நேற்று மழையை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், இந்தச் சோதனை மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. டெல்லி முழுவதும் அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையங்கள், துகள்கள் மற்றும் ஈரப்பதம் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை நிகழ்நேரத்தில் பதிவு செய்தன. இந்தத் தரவுகளின்படி, PM2.5 மற்றும் PM10 செறிவுகளில் 6 முதல் 10 சதவிகிதம் வரை குறிப்பிடத்தக்க குறைப்பு காணப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், மேலும் ஏழு மேக விதைப்பு சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "நேற்று இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் குறைந்த ஈரப்பதம் காரணமாக மழை பெய்யவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.