இன்று டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்

Su.tha Arivalagan
Jan 19, 2026,09:41 AM IST

டில்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று இரண்டாவது முறையாக தவெக கட்சி தலைவர் விஜய் ஆஜராக உள்ளார். காலை 11 மணியளவில் அவரிடம் விசாரணை துவக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக நிர்வாகிகள் பலரும் சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் படி ஜனவரி 12ம் தேதியன்று காலை டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு மறுநாள் காலை விஜய் சென்னை திரும்பினார்.




ஜனவரி 12ம் தேதி ஆஜரான போதே தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என சிபிஐ அதிகாரிகள் கூறியதாகவும், அதற்கு விஜய் தரப்பில், பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு பிறகு விசாரணையை நடத்த அவகாசம் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனை சிபிஐ அதிகாரிகள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஜனவரி 19ம் தேதியன்று காலை விசாரணைக்கு ஆஜராகும் படி விஜய்க்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பினர். கடந்த முறை விசாரணை அன்று காலை டில்லிக்கு புறப்பட்டு சென்றதால், பனிமூட்டம் காரணமாக டில்லி சென்றடைய தாமதம் ஆனது.


இதன் காரணமாக இந்த முறை முதல் நாளே, அதாவது நேற்று இரவே சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி சென்று விட்டார் விஜய். கடந்த வாரம் விசாரணைக்கு செல்லும் போது விஜய் கருப்பு நிற சட்டையில் சென்றதும், டில்லியில் இருந்து திரும்பும் போது வெள்ளைச் சட்டையில் வந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த முறை விஜய் டில்லி செல்லும் போதே வெள்ளை சட்டையில் தான் சென்றுள்ளார்


விஜய்யிடம் காலை 11 மணியளவில் விசாரணை நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இன்றுடன் விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணை நிறைவடையுமா அல்லது மீண்டும் ஒருமுறை அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்பது இன்றைய விசாரணையின் முடிவில் தெரிய வரும். ஆனால் விஜய் மட்டுமின்றி அவரது கட்சி நிர்வாகிகளும் மீண்டும் ஒரு முறை விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது என்றே சொல்லப்படுகிறது.