என்றும் இளமையுடன்...:!
- கவிதா அறிவழகன்
புதியதாய்த் துளிர்த்த மென் சருமம்,
காலைப்பனியும் கனவுத் தென்றலும் போல...
கனவுகளுடன் ஓடித் தேய்ந்த முதிர்ந்த சருமம்,
மலரின் சிரிப்பையும், முட்களின் வலியையும் சுமந்தபடி.
தசாப்தங்கள் பல கடந்த அந்த தேகமானது,
அமைதியான ஒரு பழைய பாடலைப் பாடுகிறது...
ஒரு கை இளமை, மறு கை முதுமை,
வாழ்வின் இரு துருவங்கள் இங்கே கவிதையாய் சங்கமமாகிறது.
மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையானது,
ஏற்ற இறக்கங்களால் பக்குவப்பட்ட கதைகள் பல பேசியது...
நடுங்கும் கைகளில் வரைந்த வாழ்க்கைச் சித்திரமானது,
அந்திப்பொழுதில் உருவான ஒரு அழகிய பெருங்காவியம்.
பாதைகள் பிரியும் சந்தியில் நின்றாலும்,
நிதானம் காக்கட்டும் நிமிர்ந்த தலையுடன்...
இந்த ஒரு சிறு பயணம் நமக்கானது மட்டுமே,
இதயத்தையும் ஆன்மாவையும் போற்றி வளர்ப்போம்.....
தோற்றம் முதிர்ந்தாலும், விவேகமான எண்ணங்களால்
என்றும் இளமையுடன் வாழ்வோம்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)