பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
- ஷீலா ராஜன்
தமிழகத்தின் மாநில மலர் எது என்று உங்களுக்குத் தெரியும்தானே.. எஸ்.. கரெக்ட்.. அதேதான்.. செங்காந்தள் மலர். அதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களைத்தான் இங்கே தொகுத்துள்ளோம்.
செங்காந்தள் மலர் தமிழகத்தின் மாநில மலராகத் திகழ்கிறது. இது வேலி ஓரங்களிலும், புதர்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு படர்கொடித் தாவரமாகும்.
இதன் மலர்கள் பார்ப்பதற்கு சுடர்விட்டு எரியும் நெருப்புப் பிழம்பு போலத் தோற்றமளிப்பதால், இதற்கு கார்த்திகைப் பூ மற்றும் கனற்பூ என்ற பெயர்களும் உண்டு.
சிறப்பு அம்சங்கள்:
இம்மலர் பூக்கும் போது பச்சை நிறத்திலும், பின் மெல்ல மெல்ல மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமாக மாறி, இறுதியில் அடர் சிவப்பு நிறத்தை அடையும். இது ஒரு பூவிலேயே பல வண்ணங்களைக் காட்டும் அதிசயம் கொண்டது.
மருத்துவக் குணங்கள்:
செங்காந்தளின் கிழங்குகள் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாகப் பிரசவ வலியைத் தூண்டவும், தோல் நோய்கள், தேள் கடி மற்றும் மூட்டு வலியைத் தீர்க்கவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிழங்கில் 'கோல்சிசின்' (Colchicine) எனும் வேதிப்பொருள் உள்ளது, இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.
பாம்பு மற்றும் தேள் கடிக்கு மருந்தாகவும், தோல் வியாதிகளைக் குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இச்செடியின் அனைத்துப் பாகங்களும் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், _மருத்துவர்களின் ஆலோசனையின்றி இதனை நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது.
சங்க இலக்கியம்:
சங்க இலக்கியங்களில் 'காந்தள்' பூவைப் பற்றி அதிகப்படியான குறிப்புகள் உள்ளன. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிட்ட 99 மலர்களில் முதன்மையான மலராக இது போற்றப்படுகிறது.
தமிழக அரசு அங்கீகாரம்:
இதன் அழகும், தமிழர்களின் வீரத்திற்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக விளங்குவதாலும், 1987-ம் ஆண்டு தமிழக அரசு இதனை மாநில மலராக அறிவித்தது.
காந்தள்/ கார்த்திகைப் பூ:
பெண்களின் மென்மையான விரல்களுக்குக் காந்தள் மொட்டுகள் உவமையாகக் கூறப்படுகின்றன. மலையின் உச்சியில் பூத்திருக்கும் காந்தள் மலர், வேலவன் ஏந்திய வேல் போலத் தோற்றமளிப்பதாகப் புலவர்கள் வர்ணித்துள்ளனர்.
இது கார்த்திகை மாதத்தில் (நவம்பர் - டிசம்பர்) அதிகமாகப் பூப்பதால் கார்த்திகைப் பூ ' என்றும் அழைக்கப்படுகிறது.
பன்னாட்டு அங்கீகாரம்:
தமிழகம் மட்டுமன்றி, ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் இது திகழ்கிறது.
செங்காந்தள் மலர் அழிந்து வரும் தாவர இனங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இதைப் பாதுகாப்பது அவசியமாகும். இம்மலர் ஈழத் தமிழர்களின் தேசிய மலராகவும் போற்றப்படுகிறது. இம்மலர் அதிகளவில் மருத்துவத்திற்காகப் பறிக்கப்படுவதாலும், வாழ்விடங்கள் அழிவதாலும் தற்போது அழியும் நிலையில் உள்ள தாவரங்களின் பட்டியலில் உள்ளது.
இயன்றால் நம் வீடுகளில் இம்மலரை வளர்க்கலாமே. விதைகளோ செடிகளோ கிடைத்தால் மற்றவர்களுக்கு பகிர்ந்தும் மகிழலாம்.
படிச்சதுமே சூப்பர்பா என்று சொல்லத் தோணுதோ.. இருக்காதா பின்னே.. இந்த மலரோட பெயரே.. Gloriosa superba என்பதுதானே!