என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
பாட்னா: ஆர்ஜேடி தலைவர் லால் பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது சகோதரர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் தன்னை அவமானப்படுத்தி, வீட்டிலிருந்து வெளியேற்றியதாகக் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் கட்சி அடைந்துள்ள நிலையில், தேஜஸ்வி யாதவின் முடிவுகள் மீது குடும்பத்திற்குள் இருக்கும் அதிருப்தியை இந்த மோதல் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
தற்போது லாலுவின் 3 மகள்களும் பாட்னாவை விட்டு டெல்லிக்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரோகிணி இதுகுறித்துக் கூறுகையில், எனது தந்தைக்கு சிறுநீரகம் தானம் செய்ததற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். அதற்காக பல கோடி ரூபாய் மற்றும் ஒரு லோக்சபா சீட்டைப் பெற்றதாக என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினர் என்றார் அவர்.
ரோகிணியின் மூன்று சகோதரிகளான ராகினி, சண்டா மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தங்கள் பெற்றோரின் பாட்னா வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் ஆவர்.
ரோகிணியின் இந்த அதிரடிப் பேச்சு, குடும்பத்திற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் (தேஜஸ்வியின் அண்ணன்), தந்தையால் கைவிடப்பட்டு, கடந்த ஆண்டு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். தற்போது குடும்பப் பிரச்சினை குறித்து லாலு பிரசாத் யாதவோ அல்லது அவரது இளைய மகனும் அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தேஜஸ்வி யாதவ் கட்சியை முழுமையாகக் கைப்பற்றி, தனக்கு விசுவாசமான சில ஆலோசகர்களின் துணையுடன் கட்சியை நடத்தி வருவதால், சகோதர சகோதரிகளுக்கு இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகத் தெரிகிறது. தற்போது பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் தேஜஸ்வி யாதவுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.