அகிம்சை நிலைபெறட்டும்!

Su.tha Arivalagan
Apr 01, 2026,04:41 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


சிற்றுயிர்க்கும் சிறுதுயர் நேரா வகையில் 

வாழும் வழியைக் காட்டிய வள்ளல் பெருமானே!


எவ்வுயிர்க்கும் துன்பம் தரா அகிம்சையெனும் 

அருள்நெறி நிற்க அருளிய அருகப் பெருமானே!


அரச போகத்தில் அவதரித்தாலும் 

தூய மெய்ஞ்ஞானத்தால் 

அகிலத்திற்கு அன்பைப் போதித்த அருட்பெருமானே!


"ஆசை அறுக்க! பற்றுகள் விடுக! பேரின்பம் பெறுக!" என்றே 

உலகியல் வாழ்வில் உழலும் மக்களை 

உன்னத நிலைக்கு உயர்த்த வந்த உத்தமப் பெருமானே!




வாழ்வின் இன்ப துன்பம் அனைத்தும் கண்டே இருமை நீக்கி, 

இறைத்துவம் எனும் உண்மைதனை 

உலகறியச் செய்த உண்மைப் பெருமானே!


யுகத்தின் அழிவைத் தடுக்க 

இன்றைய நாட்களில் அவசியத் தேவை மற்றும் அவசரத் தேவையாக, 

அருகிப்போன அன்பை மீண்டும் பெருகச் செய்ய...


உறுதிகொள்வோம்.. கருகிய உயிர்களை இனி காணாதிருப்போமாக! 

அன்பைத் தழைக்கச் செய்வோம்! 

சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தை மீட்டெடுப்போம்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).