Thanks to the Humanity: நன்றி சொல்வோமா!
- வெ.சங்கர்
அன்று மாலை நாடக அரங்கேற்றத்திற்கான ஒத்திகையை எங்கள் குழுவினரோடு ஆரவாரமாய் ஈடுபட்டிருந்தோம் .
மாணவச் செல்வங்களும் சோர்வின்றி தங்களுக்குரிய கதாபாத்திரத்திற்கான வசனங்களையும் மிடுக்கான நடிப்போடு வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நெறியாளர் நானும் நாடகம் சிறக்க நேரத்தை மறந்து ஒத்திகையில் இருந்தேன் .
சற்றென்று தொலைபேசி மணி ஒலிக்க நேரம் கடந்து விட்டதே என்று மாணவச் செல்வங்களை தயார் செய்து கொண்டு அந்த நிகழ்வுக்கு புறப்பட தயாராகினோம்.
எல்லோரும் சாப்பிட்டீர்களா என்று கேட்டுக் பொழுது சாப்பிடவில்லை என்கிற அந்த மாணவச் செல்வங்களின் குரலுக்கு இங்கேயே உணவருந்தலாமே என்று சொல்லும் பொழுது ஐயா நிகழ்வு நடக்கிற இடத்துக்கு சென்று சாப்பிட்டு விடலாம் என்று மாணவச் செல்வங்கள் சொல்ல பயணத்திற்கான தயாரிப்புகளோடு பேருந்து நோக்கி சென்றோம்
குறித்த நேரத்தில் வந்த அரசு பேருந்தில் கூட்டத்தோடு நின்று கொண்டு பயணித்த எங்கள் குழுவினர் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிலையத்திலேயே இறங்கி அந்த திருவிழாவின் நிகழ்வு நடக்கிற மேடையை அடைந்தனர்.
நேரம் 3 மணி தாண்டி சென்று கொண்டிருக்கிறது களைப்போடு இருந்த அந்த மாணவச் செல்வங்களை சாப்பிடுங்கள் என்று சொல்ல ஐயா உணவு கொண்டு வரவில்லை என்று அவர்களும் சொல்ல அந்த விழா அரங்கை தூய்மை செய்து கொண்டிருந்த தூய்மை பாதுகாவலர்கள் எங்களின் பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டே தங்களுடைய பணியில் இருந்தனர் .
தற்பொழுது உணவுக்கு என்ன செய்வது என்று நானும் கேட்க ஐயா ஆசிரியர்களுக்கு தொலைபேசியில் சொல்கிறோம் என்று சொல்ல தூய்மை பணியை செய்து கொண்டிருந்த அந்த தூய்மை பாதுகாவலர்கலிருந்து ஒரு பெண் வந்து என்னிடம் ஐயா நாங்கள் மதியம் வீட்டில் உணவருந்தி விட்டு வந்து விட்டோம் .
இந்த அரங்கத்தை தூய்மை செய்வதற்காக எங்களுக்கு நிர்வாக தரப்பில் இருந்து உணவு தந்திருக்கிறார்கள். அன்பு கூர்ந்து அந்த உணவை பசியோடு இருக்கிற அந்த மாணவச் செல்வங்களுக்கு வழங்குங்கள் என்று தாய் உள்ளத்தோடு அந்த உணவை எடுத்து வந்து என் கைகளில் வைத்த பொழுது என் விழிகளில் ஈரம் நிரம்பியது.
இரு கரங்களைக் கூப்பி நானும் என் மாணவச் செல்வங்களும் அந்த தூய்மை பாதுகாவலர்களை பார்த்துக் கொண்டே இன்றைய மதிய உணவை நிறைவு செய்தோம். அந்த தூய்மை பாதுகாவலர்களுக்கு நன்றியை சொல்வோமா.
(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)