வாழ்க்கை ஒரு வானவில்!

Su.tha Arivalagan
Oct 17, 2025,03:08 PM IST

- மலர்விழி ராஜா


அழகான ஒரு கிராமம். எங்கும் ஒரே பசுமை... வயல்களின் பசுமை நிறம் கண்களுக்கு விருந்தாக இருந்தது. பச்சை பட்டாடை அசைவது போல்....தென்றலின் தாலாட்டும் மனதை வருடி செல்வது மிகவும் .... சுகமாக இருந்தது.


ஓடையின் சலனமில்லாத நீரோட்டம்‌, தென்றலின் அசைவும்... நீரின்  அலை....வரிசையும்  இயற்கையின் எழில் கொஞ்சும் தோற்றம் மனதை கவர்ந்தது. 


தூரத்தில் பேருந்து வரும் சப்தம் கேட்டது. அதுவரையில் இயற்கையின் அழகில் லயித்து இருந்த ஹரிணி சட்டென  உணர்வு வந்தவளாய் ... பேருந்தில் ஏறுவதற்கு தயாராகி நின்றாள். அருகில் வந்து விட்டது  , மெல்ல படியேறி உள்ளே சென்றாள். அவளுக்காக இருந்தது போல்  ஜன்லோர இருக்கை ஒன்று கிடைத்திட அமர்ந்தாள்.


பேருந்தில் மெல்லிய இசையில் பாடல் ஒலித்து கொண்டிருந்து. காலை நேரம் என்பதால்  அதுவும் ஒரு அமைதியை தந்தது ‌.

 

"அழகான புள்ளி மானே...,..

உனக்காக அழுதேனே"


பாடல் வரிகள் அவள் மனதை அழுத்துவது போல் மனம் கலங்கினாள் ஹரிணி. பார்வையை ஜன்னலின் வெளியே ஓட விட்டாள். நினைவுகளும் அவள் முன்னே ஓடிகொண்டிருந்தது.


ஏன் இந்த நிலை?....


தாய் தந்தை தங்கையென ஒருவர் பின் ஒருவராக தன்னை தவிக்கும் நிலையில் விட்டு சென்று விட்டார்களே.....? ஒன்பது வயதில் ஒன்றும் அறியாத நிலையில் அவளது பாட்டியின் அரவணைப்பில் வாழ துவங்கினாள்.... ஹரிணி.


இருபது வயது நிரம்பிய இளம் மங்கையாக அழகு நிரம்பிய தேவதையாக வலம் வரும் அவளுக்கு மனதில் ‌யாருமே நமக்கில்லை என்ற உணர்வு மட்டும் சில நேரங்களில் வந்து வாட்டியது......


லெஷ்மிநரசிம்மர் கோயில் ...... யாரும்மா என கண்டக்டர் கேட்கவும்.... சட்டென எழுந்தாள் ஹரிணி.....




ஒ... சே... ஏன் இப்படி...தன்னை தானே கடிந்து கொண்டாள்..... இறங்கினாள். சற்று நின்று  சுற்றும் ஒருமுறை பார்த்தாள்... அழகான நீலநிற பாவாடை சட்டையும்.... மெருன் நிற தாவணியும் நீண்ட கூந்தலை அழகாக வகிடெடுத்து  லேசான பின்னலிட்டு......   மல்லிகை மலர்ச்சரம் அசைந்தது. அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.


சற்று தூரத்தில் கோயில் தெரிந்தது.  சனிக்கிழமை யானால் அவள் வழக்கமாக வரும் கோயில். தூரத்தில் இருந்தே கோயிலை பார்த்ததும் ஏனோ ஒருவிதமான மகிழ்ச்சி அவளை தழுவிய படி வலது கரத்தினால் கன்னத்தில் இட்டு கொண்டாள்...... ஹரிணி.

‌‌‍

ஹரிணி... ஹாய்


மெல்லிய புன்னகை இழையோட அருகில் வந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் சட்டென.. தயங்கி ஹாய்.....என்று புன்னகைத்தாள்...


என்ன இந்தப்பக்கம் என்றாள் ஹரிணி...


நானும் இப்போதெல்லாம் கடவுளை தரிசிக்க  வந்து கொண்டு தான் இருக்கிறேன் என்றான் அவன்.


ஓ... அப்படி யா....? என்று சற்று நடையில் வேகம் கூட்டினாள் ஹரிணி..


உன்னுடன் பாட்டி வரவில்லை யா....? என்றான்.


ம்..என்றவள் சட்டென திரும்பி ஏன் கேட்கிறாய்?... என்றாள்.


பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த தினேஷ்....


வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்வான் தினேஷ்......


அவனிடமிருந்து அவள் விலகி விடுவாள். ஆனால் இப்போது தனிமையில் பார்க்க நேர்ந்தது விட்டது. அவளைப் பற்றி நன்கு தெரிந்திருந்த தினேஷ் இன்று எப்படியாவது அவளிடம் தன் மனதில் உள்ளதை பேசிவிட நினைத்தான்...


தயவு செய்து பின்னால் வராதே.... யாரேனும் பார்த்தால் தவறாக நினைத்து விடுவார்கள். ப்ளீஸ்... என்றாள்.


உன்னிடம் இரண்டொரு வார்த்தை பேசி சென்று விடுகிறேன் என்றான்.


என்ன பேச வேண்டும்? என்றாள் ஹரிணி. சே..நிம்மதியாக கோயிலுக்கு வரலாமென்றால் இவன் வேறு என  வெறுப்படைந்த அவளது முகமே காட்டியது.


உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றான் அவன். ஒ.கே சரி சற்று நேரம் சென்று நானே உன்னுடன் பேசுகிறேன். இப்போது நான் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு வருகிறேன் என்றாள் ஹரிணி......


அவள் பேச்சை கேட்பது போல் தலையத்து சரி நான் காத்திருப்பேன் என நகர்ந்தான். 


அப்பாடா.....என மனதில் லேசான மகிழ்ச்சியுடன் .....  கோயிலை நோக்கி நடந்து சென்றாள் ஹரிணி.....


இளம் வெயில் இருந்தாலும் சாரல் மழை தூறல் மிகவும் மனதிற்கு இதமான சூழலை தந்தது. அரைமணி நேரம்..... சன்னதியில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தாள் ஹரிணி..... அவளுக்காக  வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் தினேஷ்.


ஒரு புன்சிரிப்புடன் அவனை நெருங்கினாள்...


சாரி லேட்டாகிவிட்டது என்றாள்.


பராவாயில்லை ஹரிணி.


உனக்காக நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்..... என்றான் தினேஷ்.......


சரிதான். ஆனால் இப்போது தனிமையில் உன்னுடன் பேசுவது சரியல்ல.  இருப்பினும் நான் சொல்வதை கேட்பாயா? என்றாள் ஹரிணி.....


சொல் ஹரிணி அதற்காக தானே காத்திருக்கின்றேன்....


தவறாக நினைக்க வேண்டாம்........ நான் சொல்வதை கேட்டு உனக்கு கோபம் கூட வரலாம் என தொடர்ந்தாள் ஹரிணி....


இப்போது  நீ என்னிடம் எதிர்பார்க்கும்  அன்பு  இயற்கையானது ....... அதையும் தாண்டி நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.....

நீ மேலும் படித்து நல்ல வேலைக்கு சென்று ..... உன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக நடந்து கொள். அப்பா அம்மா வின் துணையில்லாமல் ....... என் பாட்டியின் துணையில் நான் வாழ்கிறேன். உன்னை நம்பி நான் எடுக்கும் முடிவு தவறாகத் தான் இருக்கும் என்ற ஹரிணி அவனை பார்த்தாள்....


அவன் கீழே குனிந்து மண்ணை பார்த்தவாறு நின்றிருந்தான். உன் மீது தவறு இல்லை. ஆனாலும்.... கொஞ்சம் யோசித்துப் பார்...... 

இந்த வயதில்  நீ யோசித்து உன் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை தேடு...... உன்னை  தேடி எல்லாம் தானாகவே வரும்..... அவசரப்பட்டு  உனக்கு கிடைக்க வேண்டிய எதையும் தொலைத்து விடாதே...... உன்னை பிடிக்கவில்லை என்பதற்காக நான் இவற்றையெல்லாம் பேசவில்லை....... இந்த வயதில் இப்படியெல்லாம் சந்தோஷமாக இருக்கும் வேண்டும் என நீ நினைப்பது தவறில்லை.... ஆனால் உன்னுடைய உழைப்பும் உயர்வும் உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்...... இப்படி  நான் பேசுவது தவறானால் மன்னித்து விடு என்றாள் ஹரிணி......


அவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். இல்லை ஹரிணி நீதான் என்னை மன்னிக்க வேண்டும்..... பொறுப்பற்றவனாக தாய் தந்தை குடும்பம் இதைப்பற்றி யோசிக்காமல்.... காலத்தை வீணடிப்பதை நீ எனக்கு உணர்த்தியது மகிழ்ச்சி தருகிறது..... நிச்சயமாக என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்துடன் உன்னை சந்திப்பேன்........ என்றவன் அவளை பார்த்து மெல்லிய புன்னகை தவழ..... கோயிலை பார்த்து இருகரம்  கூப்பி வணங்கினான் தினேஷ்.......


நான் வருகிறேன் ஹரிணி... என்றவன்  கண்களில் சிறு ஆனந்தகண்ணீர் இழைய  முன்னோக்கி நடந்து சென்றான் தினேஷ்.......


அவளும் சிறு புன்னகையுடன் அவனுக்காக பிரார்த்தனை செய்து....பேருந்துக்காக காத்திருந்தாள்!


அதுவரை அந்த இடத்தில் இருந்த வெக்கை தணிந்து லேசான காற்று வீசத் தொடங்கியது.. வெக்கையும் தணிந்தது.. மனதுக்குள் புழுக்கமும்!