காதல் படுத்தும் பாடு!
- கவிஞர் க.முருகேஸ்வரி
சோறு தண்ணி இறங்க மறுத்து
பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து
நீ வரக் காத்திருந்து
நேரத்தை வீணடித்து
கவிதை என்ற பெயரில்
காகிதத்தை கசக்கி எறிந்து
தூக்கத்தைத் துரத்தி
தவியாய் தவிக்க விட்டு
இதயத்துடிப்பை எகிற விட்டு
நீ விட்டுப் போனாய் என்பதற்காக
இத்துப் போன பொருட்களை மறைத்து வைத்து
படிப்பையும் மூட்டை கட்டி
தாய் தந்தை அன்பை மறந்து
அண்ணன் தம்பி உறவைப் பிரிந்து
ஹார்மோனின் விளையாட்டு என்பதை அறியாமல்
அறிவுரைகள் ஏற்க மறுத்து
ஆட்டமாய் ஆடி
ஓட்டமாய் ஓடி
திக்கற்று தெருவில் நின்று
ஆயிரம் ஆயிரம் வேதனைகள் அனுபவித்து
கடைசியில் இத்தனை வலிகளையும்
சுகம் தான் என சொல்ல வைத்ததே
இந்தப் பாழாய் போன காதல்..!
காலம் கடந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இது காதல் படுத்தும் பாடு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).