மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
- ஸ்வர்ணலட்சுமி
தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சிவன் கோவில்களில் முதலில் சிவபெருமானுக்கு தான் முக்கியத்துவம் அளிப்போம்.ஆனால், மதுரையில் மட்டும் அன்னை மீனாட்சி அம்மனுக்கு தான் முதலில் பூஜை நடைபெறுகிறது.
இதன் பின்னணியில் ஆன்மீகம் மற்றும் ஒரு வரலாறு உள்ளது.
மதுரையின் அரசர் ஆன மலையத்துவஜ பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மன் அவருக்குப் பின் இந்த அரசை ஆட்சி செய்த மகாராணி ஆவார். சிவபெருமான் மீனாட்சி அம்மனை மணமுடித்து ஒரு மருமகனாகவே மதுரைக்கு வந்தார். இங்கு மீனாட்சி அம்மன் தான் நகரத்தின் அரசி. சொக்கநாதர் அரசராக வந்தவர் அல்ல, மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனின் கணவராக வந்தவர். அதனால் தான் இன்று வரை கோவில் மரியாதைகளில் அன்னை மீனாட்சிக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
எனவே இக்கோவிலை சொக்கநாதர் கோவில் என்று அழைக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்று பெருமை வாய்ந்ததாக திகழ்கிறது. இது வெறும் பெயர் மட்டுமல்ல ஒரு அரச மரபும் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே மதுரையின் அரசியான மீனாட்சியம்மனுக்கே எப்போதும் முதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இம் முறையினாலேயே இன்றும் மீனாட்சியம்மன் பூஜை நடைபெற்ற பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜை நடைபெறுகிறது.
இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கிழக்கு அல்லது அம்மன் சன்னதி வழியாக நுழைந்து, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னரே, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய
வேண்டும் என்பது இத்தலத்தின் முக்கிய விதியாகும்.
மீனாட்சி அம்மன் சிறப்புகள் :
மீனாட்சி அம்மன் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறார். ஆகம மரபின் படி பச்சை என்பது வளம், செழிப்பு, விளைச்சல், உயிர்ப்பு ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.
பக்தர்களை ஆட்கொள்ளும் அன்னை மீனாட்சி என்றால் "மீன்" போன்ற கண்களை உடையவள் என்று பொருள் . மீன் போன்ற அழகிய கண்களை உடைய தெய்வப் பெண் நின்று நிகழ்த்திய ஆட்சி என அவளுடைய ஆளுமையை முன் வைத்தே மீனாட்சி என்ற பெயர் அன்னைக்கு வந்தது. மீன் தனது முட்டைகளை எட்ட நின்று தனது கண் பார்வை திறத்தினாலேயே குஞ்சுகளை தோன்றச் செய்து தனது பார்வை ஆற்றலினாலேயே அவற்றை பாதுகாத்து வளர்ப்பது மீன்களின் இயல்பு.
அது போன்று மீனாட்சியம்மன் தனது அருட்கருணை திருக்கண் பார்வையினாலேயே பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாலித்து அவர்களை காத்து வருகிறாள். அன்னையின் இந்த அருட் செயல் காரணமாகவும் மீனாட்சி என்ற பெயர் வந்தது. இதனால் அவளை முதலில் தரிசிப்பதே மரபாகஉள்ளது.
மதுரையில் அம்மையும் அப்பனும் குடிகொண்டிருக்கும் இந்த திருக்கோவிலை சுந்தரேஸ்வரர் மீனாட்சி ஆலயம் என்று யாரும் கூறுவதில்லை.மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்று தான் மக்கள் மிகவும் பரவசத்துடன் அழைத்து வருகின்றனர்.
"சிவன் இல்லையேல் சக்தி இல்லை,சக்தி இல்லையேல் சிவன் இல்லை"
இத்தனை சிறப்பு மிக்க மதுரை மீனாட்சியம்மனுக்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 17ஆம் தேதி, ஆவணி 31, வியாழக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அனைவரும் மீனாட்சி அம்மன் அருளால் நல்வாழ்வு வாழ்வோமாக..
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.