அமீத் ஷா பெயரைச் சொல்லி மாணிக்கம் தாகூர் போட்ட டிவீட்.. கடைசி வரி அன்டர்லைன்!
சென்னை: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒரு புது டிவீட் போட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷாவின் பெயரைச் சொல்லித்தான் அவர் டிவீட் போட்டுள்ளார் என்றாலும் கூட அந்த டிவீட்டின் கடைசி வரி வேறு யாரையோ மறைமுகமாக கூறுவது போல உள்ளதாக நெட்டிசன்கள் அர்த்தம் கற்பித்து வருகிறார்கள்.
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் சமீபத்திய பேச்சுக்கள் செயல்பாடுகளால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வாதப் பிரதிவாதங்களும் அரங்கேறிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன்.
அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம்.
காரணம் எளிது — இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
Nainar Nagendran மற்றும் Edappadi K. Palaniswami இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்… ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி!
அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல — மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது
இதுதான் அந்த டிவீட். ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பை வைத்து அவர் இந்த டிவீட்டைப் போட்டுள்ளார். ஆனால் கடைசி பாராவில், அவர் குறிப்பிட்டிருப்பது பாஜகவுக்கா அல்லது வேறு யாருக்குமானதா என்ற சர்ச்சையை சிலர் கிளப்பி வருகின்றனர். புரிய வேண்டியவர்களுக்கு அது புரியும் என்றும் சிலர் அதில் கருத்திட்டு வருகின்றனர்.
நீங்க சொல்லுங்க.. யாரைச் சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?