மார்கழி 08ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 08 வரிகள்

Su.tha Arivalagan
Dec 23, 2025,11:01 AM IST

மார்கழி மாதத்தின் எட்டாம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...


திருப்பாவை பாடல் 08 :


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


விளக்கம் : 


கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் நிறைந்த மேய்ச்சல் நிலத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றன. அழகிய பெண்ணே! நீ துயில் கொண்டு இருப்பது முறையா? நீ எங்களுடன் வரவேண்டும் என்பதற்காக மற்றவர்களையும் தடுத்து நிறுத்தி உன்னை அழைத்து செல்லலாம் என்று வந்து நிற்கின்றோம். அவர்களின் மனதை கடுக்க வைக்காமல் வேகமாய் துயில் எழுந்து வா…! தன்னுடைய தாய்மாமனான கம்சன் ஏவிய பல அசுரனின் வாயை பிளந்து கொன்று, பல துர்ச்செயல்கள் செய்து வந்த மற்போர் செய்யும் வீரர்களையும் துவம்சம் செய்தவன் கண்ணபிரான். தேவர்களுக்கு முதற்கடவுளான நாராயணனின் புகழை பாடியபடி கோவிலுக்கு சென்று வழிபடுவோம். அவருடைய அருள் கிடைத்தால் நம்மை குற்றமும், பாவமும் செய்ய வைக்கும் ஆசை அசுரனை, மமதை மல்லனை நாமே கொன்றுவிடலாம் என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.




திருவெம்பாவை பாடல் 08 :


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.


விளக்கம் : 


தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.