மார்கழி 12ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 12 வரிகள்

Su.tha Arivalagan
Dec 27, 2025,10:06 AM IST

மார்கழி மாதத்தின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்று மாதமும் முழுவதும் பாடப்படும் ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பதிகங்களும் ஆகும். ஆன்மீக மாதமான மார்கழியில் புண்ணியத்தையும், இறையருளையும் பெற்றுத் தரும் இந்த பாடல்களில் மார்கழி மாதத்தின் 12ம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...


திருப்பாவை பாடல் 12 :


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


விளக்கம் : 


இளம் கன்றுகளின் கனைத்தலை கேட்டதும், அவற்றின் கனைத்தலின் பொருள் உணர்ந்து அதாவது, அவற்றின் பசியை எண்ணிய எருமைகள் தங்கள் மடி வழியே தொடர்ந்து பால் வழிய அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பாலினால் வீட்டின் வாசலானாது சேறாகின்றது. அத்தகைய எருமைகளுக்கு உரியவரான நற்செல்வனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசல் முன் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த மனதிற்கு பிடித்த பெருமானின் புகழை பாடிக் கொண்டு இருக்கின்றோம். நீ இன்னும் வாய் திறவாமல் இருக்கின்றாயே. ஆயர்பாடியில் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்? என்று கேட்கின்றாள் ஆண்டாள். 




திருவெம்பாவை பாடல் 12 :


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


விளக்கம் : 


தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.