ஆடம்பரம், படோடபம்.. வீணாகும் உணவுகள்.. கேளிக்கையாகிப் போன திருமண விழாக்கள்
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
மாலை சூடும் மணநாள்., இரு மணங்கள் இணையும் திருநாள் எல்லோரும் அறிந்தது தான். ஒரு வாரம், பத்துநாள் என்று திருமணத்தை திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தது ஒரு காலம்.
ஊரை கூட்டி மேள தாளம் முழங்க, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக புரோகிதர் மந்திரம் சொல்ல கெட்டி மேளம் சத்தம் ஒரு பக்கம், யாகக்குண்ட புகை ஒரு பக்கம் இருக்க இரு வீட்டார், சொந்த பந்தம் வாழ்த்த மங்கள நானை மணமகன் மணமகள் கழுத்தில் கட்ட இனிதாக நிறைவு பெறும் திருமணம் அது மனதின் சுகமான நினைவலைகள் தான் இல்லையா?
திருமணத்திற்கு வந்தவர்கள் அறுசுவை உணவை வயிராற உண்டு, பரிசுப் பொருட்களையோ, பணத்தையோ மணமக்கள் கையில் கொடுத்து மகிழ்ச்சியோடு அரங்கேறியது அந்த நாள் திருமணங்கள்.
இன்று திருமணம் என்பதே கேளிக்கையாகிப் போனது தான் கசப்பான உண்மை. செண்டைமேளம் அல்லது மேடைக் கச்சேரி ஒரு பக்கம் காதைப்பிளக்க, ஆபாசமான ஆடல் பாடல்கள் ஒரு பக்கம் கண்களைக் கூசவைக்கும் கொடுமை நடந்தேறும்.
இதை எல்லாம் விட திருமண விருந்து என்ற பெயரில் நடக்கும் உணவுக் கலாச்சாரம் மனதைக் கலங்கச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்றைய கால கட்டத்தில் மக்கள் பலரும் பி. பி., சுகர், மற்றும் சிறுநீரக பிரச்சனையால் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இலை நிறைய பெயர் தெரியாத உணவு வகைகள். அந்த உணவை அவர்கள் சாப்பிடுவார்களா, மாட்டார்களா? என்று கேட்டுவிட்டுப் பரிமாறலாம்.
திருமணத்திற்குச் செல்வோரில் பலரும் மேற்சொன்ன நோயாளிகளாக இருப்பதால் இலையில் பரிமாறிய உணவை அரைகுறையாகச் சாப்பிட்டுச் செல்வது தான் வேதனையின் உச்சம். குறைந்தபட்சம் இலை போடும் போதே யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுப் பறிமாறினால் தேவையில்லாமல் உணவு குப்பைத் தொட்டிக்குப் போகும் அவலம் ஏற்படாது தடுக்கலாம். தவிர திருமணச் செலவில் சிறு பகுதி மிச்சம் செய்யலாம். திருமணத்திற்கு வந்தவர்களும் வயிறு நிறைந்த சந்தோஷத்தில் மனம் நிறைந்து மணமக்களை வாழ்த்திச் செல்வார்கள்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி! தவிர உணவு உற்பத்திக்குப் பின்னால் எத்தனையோ ஏழை விவசாயிகள் படும் வேதனையை, துன்பத்தைப் பார்க்கும் எவரும் நிச்சயமாக உணவை விரயம் செய்ய மாட்டார்கள். திருமணச்செலவில் ஒரு சிறு தொகையை அநாதை ஆசிரமங்களுக்கோ, முதியோர் இல்லத்திற்கோ நன்கொடையாகக் கொடுத்தால் நல்ல மனதோடு அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்கள். நாலு பேர் பசியாற உதவிய சந்தோசமும் நமக்குக் கிடைக்கும். இதையெல்லாம்விட்டு ஆடம்பரம் என்ற பெயரில் திருமணம் மட்டும் இல்லை., பல விழாக்களும் நடைபெறும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ஆடம்பரம் என்ற பெயரில் தன்னை விளம்பரம் செய்து கொண்டு உணவையும், பணத்தையும் வீணாக்கும் கலாச்சாரம் மறைந்திட., எல்லோரும் இன்புற்று வாழ சற்றே நாமும் சிந்திப்போம்!
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)