மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக
சென்னை : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் விபரத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் வெற்றி பெற்று, பிறகு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமாரவேல், சத்யபாமா ஆகிய இருவரையும் வேட்பாளராக தவெக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் மதுராந்தம், தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்று, எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 09ம் தேதியான நேற்று துவங்கி உள்ள நிலையில், அக்டோபர் 06ம் தேதி இங்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஏற்கனவே திமுக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் எஸ்.சுகன்யா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தவெக.,வும் தங்கள் தரப்பு வேட்பாளர்கள் விபரங்களை அறிவித்துள்ளது. இதன் படி, ஏற்கனவே மரகதம் குமாரவேல் வெற்றி பெற்ற தொகுதியான மதுராந்தகம் தொகுதிக்கு அவரையும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமாவை அந்த தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
தவெக.,வில் இணைந்த பிறகு இவர்கள் இருவருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் செல்வாக்கு காரணமாக யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்பது ஏற்கனவே சட்டசபை தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. அதனால் விஜய் வந்து பிரச்சாரம் செய்தாலே, இவர்கள் இருவரும் இந்த தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்று, எம்எல்ஏ., ஆவது உறுதியாகி விடும்.
அதே சமயம், தமிழகம் முழுவதும் விசில் புரட்சி ஏற்பட்டு, தவெக.,விற்கு மக்கள் 108 இடங்களில் வெற்றியை தந்த போதும், அதிமுக கட்சிக்காகவும், அந்த கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் தேர்வு செய்த மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமா இருவரும், மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி மக்கள் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் அது தவெக.,வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். நடக்க இருக்கும் அத்தனை இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கக் கூடிய தவெக, ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட் வழங்கி, மிகப் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறதோ என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.